திருவனந்தபுரம்: ஆளுநர் உரையின் முக்கிய பகுதிகளை படிக்காமல் தவிர்த்து விட்டார் ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் வழக்கமாக ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கும். மாநில அரசு தயாரித்து தரும் உரையை ஆளுநர் அப்படியே வாசிக்க வேண்டும் என்பது மரபு.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பேரவைக் கூட்டத்துக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் வருகை தந்தார். பேரவை மண்டபத்துக்கு வந்த கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் பேரவையில் உரையை வாசித்தார். அப்போது உரையில் இடம்பெற்றிருந்த சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்துவிட்டார்.
இதுதொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர், 12-வது பத்தியின் முதல் பகுதியை வாசிக்கவில்லை அல்லது 15-வது பத்தியின் கடைசி பகுதியை முடிக்கவில்லை. 72 பக்கம் கொண்ட கேரள மாநில கொள்கை உரையில் 157 பத்திகளில் 16-வது பத்தியை இணைத்து வாசித்துள்ளார். மத்திய அரசு நிதி வழங்காதது மற்றும் மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காதது போன்றவற்றை அவர் தவிர்த்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை விளக்கம்: இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பேரவையில் ஆளுநர் வாசிக்க வேண்டிய உரை ஆளுநர் மாளிகைக்கு வந்தபோது அதில் சில பகுதிகளில் தவறாக உள்ளதாகவும், தேவையில்லாத, உண்மையில்லாத சில விஷயங்கள் அதில் உள்ளதாகவும், அதை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருத்தப்பட்ட உரை என்று ஆளுநர் மாளிகைக்கு அரசு சார்பில் அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் மாளிகை கூறிய விஷயங்கள் உரையிலிருந்து நீக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தன.