இந்தியா

‘‘கேரளாவில் சிபிஎம் வெற்றி பெற பாஜக விரும்புகிறது’’ - ராகுல் காந்தி விமர்சனம்

மோகன் கணபதி

திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற வேண்டும் என்று பாஜக விரும்புவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கன்னூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ‘‘பாஜகவுக்கும் சிபிஎம்-க்கும் இடையே மறைமுக கூட்டணி இருக்கிறது. இவ்விரு சக்திகளும் இணைந்துதான் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியை எதிர்க்கிறார்கள்.

பிரதமர் எங்கு சென்றாலும், கோயில்கள், மதம், கடவுள்கள் குறித்துப் பேசுகிறார். ஆனால், கேரளாவுக்கு வரும்போது சபரிமலை கோயில் விவகாரத்தை அவர் எழுப்புவதில்லை. சிபிஎம் தலைவர்கள் சபரிமலை கோயிலில் இருந்து தங்கத்தை திருடியுள்ளார்கள். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்து மதத்தின் பாதுகாவலர் என்று சொல்லிக் கொள்ளும் அவர், கேரளாவுக்கு வந்துவிட்டு சபரிமலை குறித்து எதுவும் பேசாமல் செல்கிறார்.

          

பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதல்வரை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். கேரள முதல்வர் மீதான வழக்குகளில் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது முதல்வருக்கே தெரியும். காங்கிரஸ் கட்சி, மோடியை தாக்கிப் பேசுவதை நீங்கள் கேட்க முடியும். ஆனால், கேரள முதல்வர், பிரதமரை தாக்கிப் பேசுவதையோ, அல்லது பிரதமர், கேரள முதல்வரை தாக்கிப் பேசுவதையோ நீங்கள் ஒருபோதும் கேட்க முடியாது’’ என தெரிவித்தார்.

தொடர்ந்து கோழிக்கோட்டில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘‘நாம் ஒரு நிலையற்ற, ஆபத்தான காலகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். எரிபொருள் விலைகள் உயரப்போகின்றன. பணவீக்கம் அதிகரிக்கப் போகிறது. ஆனால், இதைச் சமாளிக்க என்ன செய்வது என்பது குறித்து மோடிக்கோ அல்லது கேரள முதல்வருக்கோ எந்த தெளிவும் இல்லை. எங்களின் முதல் நடவடிக்கை கேரள மக்களை பாதுகாப்பதாகவே இருக்கும்.

நாங்கள் கேரள பெண்களையும் அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்கப் போகிறோம். ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வரும் நாளில் இருந்து கேரளாவில் பெண்களுக்கான பேருந்து பயணம் இலவசமாக இருக்கும்.

கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம்தோறும் தனிப்பட்ட செலவுகளுக்காக ரூ.1,000 வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியமாக வழங்கப்படும்.

தொழில்தொடங்கவோ அல்லது தொழில்முனைவோராக மாறவோ விரும்பும் இளைஞர்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். உம்மன் சாண்டி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை நாங்கள் தொடங்க இருக்கிறோம். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்குமான மருத்துவக்காப்பீடு ரூ.25 லட்சமாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT