எர்ணாகுளம்: பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேரள சட்ட அமைச்சர் பி.ராஜீவ், “நடிகை பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் வழக்கில் எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்யும். இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனிடம் ஏற்கெனவே பேசி உள்ளேன். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அதன் பின்னணியில் உள்ள சதித் திட்டத்தை ஏன் நிறுவ முடியவில்லை என்பது குறித்து தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
இந்த வழக்கில் அரசு முன்வைத்த வாதங்கள் ஐந்து புத்தக தொகுப்புகளாக தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த பக்கங்கள் 1,512. ஆனால், தீர்ப்பு இந்த ஆவணங்களுடனோ அல்லது விசாரணையுடனோ ஒத்துப்போகவில்லை.
மாநில அரசு எப்போதும் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நின்றுள்ளது. பினராயி விஜயன் முதல்வராக இல்லாதிருந்தால், இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் இல்லாதிருந்தால் விசாரணை இத்தனை தீவிரமாக நடந்திருக்காது. காவல் துறையினர் இந்த வழக்கை விடா முயற்சியுடன் மேற்கொண்டனர். அரசு தரப்பும், தனது வாதத்தை நீதிமன்றத்தில் வலுவாக வைத்தது” எனத்தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன? - பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கொச்சி போலீஸார், பாதிக்கப்பட்ட நடிகையின் முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில் உட்பட 7 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இச்சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டியதாகப் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.
8 ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பிறகு இன்று (டிசம்பர் 8) எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிபதி ஹனி எம். வர்கீஸ், இந்த வழக்கில் நடிகர் திலீப்பை குற்றங்களில் இருந்து விடுவித்தார். ஒன்று முதல் ஆறு வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 8-வது நபரான நடிகர் திலீப்பை விடுவித்தார்.
இந்த வழக்கில் முதல் குற்றவாளி என்.எஸ்.சுனில் எனும் 'புல்சர் சுனில்'. இரண்டாவது குற்றவாளி மார்ட்டின் ஆண்டனி, மூன்றாவது குற்றவாளி பி. மணிகண்டன், நான்காவது குற்றவாளி வி.பி. விஜீஷ், ஐந்தாவது குற்றவாளி எச்.சலீம் என்கிற வடிவால் சலீம், 6-வது குற்றவாளி பிரதீப், 7-வது குற்றவாளி சார்லி தாமஸ், ஒன்பதாவது குற்றவாளி சனில் குமார் என்கிற மேஸ்திரி சனில், மற்றும் பதினைந்தாவது குற்றவாளி சரத் நாயர் ஆவர்.
இரண்டு முக்கிய சாட்சிகளான முன்னாள் எம்.எல்.ஏ பி.டி. தாமஸ் மற்றும் இயக்குநர் பாலச்சந்திர குமார் ஆகியோர் விசாரணையின் போது இறந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.