ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள், ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு தங்களது எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், பட்காம் உள்ளிட்ட நகரங்களில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் வீதிகளில் குழுமி கோஷம் எழுப்பினர். இதேபோல நேற்றைய தினம் லடாக்கில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் ஆதரவு தெரிவித்தனர். அப்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு தங்களது கண்டனத்தை அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அயத்துல்லா அலி காமேனியின் படம் மற்றும் ஈரானுக்கு ஆதரவான பதாகைகளை தங்கள் வசம் கொண்டிருந்தனர். இதில் சில இடங்களில் பேரணியும் சென்றனர்.
ஈரானிய மக்களுடன் தங்களுக்கு உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், ஈரானின் ஷியா தலைமைத்துவத்துடன் தங்களுக்கு உள்ள சித்தாந்த மற்றும் மதப் பிணைப்புகளை உறுதி செய்யவுமே இந்த ஆர்ப்பாட்டம் என காஷ்மீர் மக்கள் தெரிவித்தனர்.
பற்றி எரியும் ஈரான்: அமெரிக்கா உடனான மோதல் காரணமாக ஈரான் மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக ஈரானில் அத்தியாவசிய பொருட்களின் விலை 72 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. மருந்துகளின் விலை 50 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது. சுமார் 24 சதவீத இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி பரிதவித்து வருகின்றனர். மக்கள் மீதான வரிச்சுமை 62 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் ஈரான் சிக்கித் தவித்து வருகிறது.
இந்தச் சூழலில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராக கடந்த மாதம் 28-ம் தேதி தலைநகர் தெஹ்ரானில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. ஜென் இசட் இளைஞர்கள் தலைநகரில் திரண்டு மதத் தலைவர் காமேனி, அதிபர் மசூத் பெசேஸ்கியான் பதவி விலக கோஷமிட்டனர். அந்த நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்கும் வகையில் ராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 2500-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.