பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கர்நாடகா அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சிவசங்கரப்பா சஹுகர்
பெங்களூரு: கர்நாடகா அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சிவசங்கரப்பா சஹுகர், தனது மகள் சுமாவுக்குச் சட்டவிரோதமாக போலி சாதிச் சான்றிதழை சமர்ப்பித்து அரசு வேலை பெற்றுத் தந்ததாக கடந்த ஜனவரியில் புகார் எழுந்தது.
சஹூகர் லட்சக் கணக்கில் ஊதியம் பெற்று வரும் நிலையில், அவரது குடும்பத்தின் ஆண்டு வருமானம் வெறும் ரூ.40 ஆயிரம் மட்டுமே எனக் குறிப்பிட்டு, கிரீமி லேயர் வரம்பை தளர்த்தி, போலி வருமானச் சான்றிதழை அவரது மகள் சமர்ப்பித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அதிகார துஷ்பிரயோகம் செய்த சிவசங்கரப்பா சஹுகர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டது.
இதுகுறித்து விரிவான ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், “சிவசங்கரப்பா சஹுகர் மீதான புகார்களுக்குப் போதிய முகாந்திரம் இருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, அவர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்.
இக்குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்து வதற்கு ஏதுவாக, இந்திய அரசியலமைப்பு 317 (1) பிரிவின் கீழ், உச்ச நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க குடியரசுத் தலைவரின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது” என குறிப்பிட்டு உள்ளார்.