சந்தேகத்தைக் கிளப்பிய புதிய காலணி.
பெங்களூரு: கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்களும் அருகில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இதனால் இந்த வழக்கை சிஐடி விசாரணைக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் அருகேயுள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகுதியில் கடந்த 15-ம் தேதி அதிகாலையில் அந்தோணிசாமி (50), ஜான் ரோஸ் பீட்டர் (42), லாசர் டேவிட் குமார் (33) ஆகிய மூவரும் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஹனூரில் பாதிக்கப்பட்டோரின் உறவினர்களும், கிராமத்தினரும் போராட்டத்தில் குதித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து வனத்துறை நிர்வாகம், ‘மான் வேட்டையாட சென்ற மூவரும் வனத்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். தங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக வனத்துறையினர் திருப்பி சுட்டதால் மூவரும் உயிரிழந்தனர்’ என்று தெரிவித்தனர். இதை உறவினர்கள் ஏற்கவில்லை. இந்தச் சம்பவத்துக்குத் தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் உத்தரவிட்டார். அதன்பின், வனத்துறையினர் 7 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
‘புதிய காலணி’ - இதற்கிடையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட ஷாக்யா வனப்பகுதியில், கொள்ளேகால் துணை ஆணையர் தினேஷ் குமார் மீனா தலைமையில் போலீஸாரும், வனத்துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு சிதறிக் கிடந்த பொருட்களைச் சேகரித்தனர். வனத்துறை ஊழியர்கள் ஷிவராஜ், சேகரையா, அனில்குமார் உள்ளிட்ட 7 பேரையும், இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர்த் தப்பிய மகிமை தாஸையும் துணை ஆணையர் தினேஷ் குமார் மீனா விசாரித்தார்.
மேலும், கொல்லப்பட்ட 3 பேரிடம் இருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள், 3 கத்திகள், 2 செல்போன்கள், கட்டிங் பிளேயர், ஸ்குரு டிரைவர், 2 பைகள், வெங்காயம், தக்காளி, சமையல் பாத்திரங்கள், 2 பைகளில் மான் இறைச்சி, ஒரு ஜோடி ஹவாய் செருப்பு ஆகியவற்றை கைப்பற்றியதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், வனத்துறை வெளியிட்ட புகைப்படத்தில் இடம்பெற்ற, ஸ்டிக்கர் பிரிக்காத புதிய காலணி பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்தோணிசாமியின் மனைவி லூர்து மேரி, ‘இரவெல்லாம் காட்டில் அலைந்தவரின் செருப்பில் மண் கூட ஒட்டி இருக்காதா?’ என்று கேள்வி எழுப்பினார்.
ஜான்ரோஸ் பீட்டர், லாசர் குமார், அந்தோணிசாமி
நேரடி சாட்சியம்: இந்த வழக்கின் நேரடி சாட்சியான மகிமை தாஸ், “வனத்துறையினர் மிகவும் அருகில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். மலைப் பகுதியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினேன். என்னை வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்து, சாட்சி சொல்ல வைக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் சொல்வதைப் போல சொல்லாவிட்டால், என்னை வழக்கில் சிக்க வைத்து விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது” என்று வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்தார்.
இந்தச் சூழ்நிலையில், கொல்லப்பட்ட 3 பேரின் பிரேதப் பரிசோதனை கடந்த 16-ம் தேதி மைசூருவில் உள்ள கே.ஆர். அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், “இறந்த 3 பேரும், 10 அடிக்குக் குறைவான தூரத்தில் இருந்து சுடப்பட்டுள்ளனர்.
ஜான் ரோஸ் பீட்டரின் இடது காது பகுதியில் இருந்து மார்பு பகுதி வரை சுமார் 28 செ.மீ. நீளத்துக்கு ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது. அந்தோணிசாமி, லாசர் டேவிட் குமார் ஆகியோரின் வலது மார்பு, தொடை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
லாசட் டேவிட் குமார் உடலில் வலது மார்புப் பகுதியில் 8.5 செ.மீ. வலது தொடையில் 13 செ.மீ. ஆழத்துக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மிக அருகாமையில் இருந்து சுடப்பட்டது உறுதியாகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஜி அண்ட் ஐஜிபி) சலீம், “மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு சிஐடி விசாரணைக்கு மாற்றப்படுகிறது” என்று நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து துணை காவல் ஆணையர் தினேஷ் குமார் மீனா தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கைகள் சிஐடி போலீஸாருக்கு அனுப்ப, சாம்ராஜ் நகர் காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.