பெங்களூரு: கர்நாடகாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா 17-வது முறையாக சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: 16 வயதுக்குட்பட்ட சிறார் அதிகளவில் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் அவர்களின் மனநலம், கல்வி, எதிர்காலம் பாதிக்கப்படுவது அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.
சமூக வலைதளங்களுக்கு சிறார் அடிமையாவதால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க கர்நாடக அரசு உறுதிப்பூண்டுள்ளது. அதனால் 16 வயதுக்கு குறைவான சிறார் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சித்தராமையாவின் இந்த அறிவிப்பை காங்கிரஸார் மட்டுமல்லாமல் பாஜக, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், கல்வியாளர்களும் வரவேற்றுள்ளனர். நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடகா இந்த நல்ல முடிவை எடுத்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர்.