புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருடன் இருந்த ஒருவர் பெயரில் உடற்கூராய்வு அறிக்கை அனுப்பிய சம்பவத்தில் மருத்துவர் உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கான்பூரில் பிரபல ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரியில் ஹாலெட் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு ஓர் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. வார்டு எண் 12-ல் உள்ள படுக்கை எண் 42-ல் ஒரு அடையாளம் தெரியாத நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அந்த நபர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். இவரது உடலை கூறாய்வு செய்து காவல் துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டி இருந்தது.
இந்நிலையில், அந்த நபரின் உடலை உடற்கூறாய்வு ஆய்வறிக்கைக்கு பதிலாக அருகிலிருந்த படுக்கை எண் 43 -ல் இருந்தவரின் பெயரில் அறிக்கை அனுப்பி உள்ளனர்.
படுக்கை எண் 43-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தவர் வினோத் குமார். இவர் இறந்துபோனவருக்கு ஒத்த வயதுள்ளவர். இவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர். வினோத்குமார், உயிருடன் இருந்தபோதே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு உடற்கூறாய்வு செய்து காவல்துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அப்போது, பணியில் இருந்த ஒரு மருத்துவர் மற்றும் 2 ஊழியர்களின் அவசரத்தால் இந்தத் தவறு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த துணை முதல்வர் பிரஜேஷ் பாதக் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சஞ்சய் கலா, உடனடியாக இளநிலை மருத்துவர் ஹிமான்ஷு மவுரியா, செவிலியர் சன்னி சோன்கர் மற்றும் வார்டு உதவியாளர் ரஹ்னுமா ஆகியோரை பணியிடைநீக்கம் செய்தார்.