புதுடெல்லி: ஹார்முஸ் ஜலசந்தி பாதையில் பயணிக்கும் இந்திய கப்பல்களின் பாதுகாப்பு குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். இந்த தகவலை, இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
ஈரானை ஒட்டிய முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில், ஈரான் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தி உள்ளது. ஈரானின் அனுமதி இன்றி பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
இதனால், கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உலகளாவிய எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், “வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் சமீப நாட்களில் மூன்று முறை தொலைபேசி மூலம் பேசியுள்ளனர். கடைசியாக நடந்த உரையாடலில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. இதற்கு மேல் தற்போது நான் ஏதேனும் கூறினால், அது பொருத்தமானதாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
ஈரானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்குப் பதில் அளித்த ரந்திர் ஜெய்ஸ்வால், “ஈரானில் தற்போது சுமார் 9,000 இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் மாணவர்கள், கடல் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள், நிபுணர்கள், யாத்திரிகர்கள் ஆகியோர் அடங்குவர். இவர்களில் பலர், குறிப்பாக மாணவர்கள், ஈரானை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர்.
தெஹ்ரான் நகரில் இருந்த சில இந்தியர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் பாதுகாப்பான பிற நகரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கிருந்து அஜர்பைஜான், அர்மீனியா வழியாக வெளியேற விரும்பும் இந்தியர்களுக்கு விசா மற்றும் நில எல்லையை கடப்பதற்கான உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்தியர்கள் பலரும் எங்களை அணுகியுள்ளனர். அவர்கள் ஈரான் எல்லையைக் கடந்து அஜர்பைஜான், அர்மீனியா செல்ல உதவி செய்து அங்கிருந்து வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்குத் திரும்ப ஏற்பாடு செய்துள்ளோம். நில எல்லைகள் வழியாக ஈரானை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்கள் எங்கள் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
மேலும், மோதல் தொடங்கிய பிறகு பிரதமர் நரேந்திர மோடி, பல வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பேசியதாக ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
“இந்த மோதல் தொடங்கிய பிறகு பிரதமர் மோடி, பல வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பேசினார். அந்த உரையாடல்களின்போது, விரைவில் அமைதி திரும்ப பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார். மேலும் பொதுமக்கள் உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளில் அதிக அளவில் இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்களின் பாதுகாப்பும் நலனும் மிகவும் முக்கியமானவை என்பதை பிரதமர் குறிப்பிட்டார்” என்று தெரிவித்தார்.
இந்தப் போர் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரந்திர் ஜெய்ஸ்வால், “நமது வெளியுறவுத் துறை அமைச்சர், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார். சமீப நாட்களில் மூன்று முறை பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இந்தப் போரின் தாக்கம் அனைவருக்கும் தெளிவாக தெரிகிறது. உலகம் முழுவதும் பல நாடுகளும் மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டார்.