ஸ்ரீநகர்: காஷ்மீர் போலீஸின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி சைஃபுல்லா தாடியை மழித்து, மொட்டையடித்து தலைமறைவாக சுற்றித் திரிகிறார்.
பாகிஸ்தானை சேர்ந்த சைஃபுல்லா, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் இணைந்து இந்தியாவுக்கு எதிரான நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் அவர் ஊடுருவினார். ஜம்மு பகுதியில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் அவருக்கு தொடர்பு இருக்கிறது.
கடந்த 4-ம் தேதி காஷ்மீரின் கிஷ்துவார் பகுதியில் பதுங்கியிருந்த சைஃபுல்லாவையும் அவரது கூட்டாளிகளையும் பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் ஒரு பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் சைஃபுல்லா அங்கிருந்து தப்பியோடி விட்டார். காஷ்மீர் போலீஸ், பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க அவர் தாடியை மழித்து, மொட்டையடித்து தலைமறைவாக சுற்றி வருவதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து காஷ்மீர் போலீஸ் தரப்பில் சைஃபுல்லாவின் புகைப்படங்கள் கிஷ்துவார், தோடா பகுதிகளில் ஒட்டப்பட்டு உள்ளன. பொதுமக்கள் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க, அவர் தாடியோடு இருக்கும் புகைப்படம், தாடியில்லாத புகைப்படம் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் மூத்த அதிகாரி சந்தீப் மேத்தா கூறும்போது, “ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி சைஃபுல்லாவை தீவிரமாக தேடி வருகிறோம். அவர் தப்பிச் செல்வதை தடுக்க பொது இடங்களில் அவரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு உள்ளன. பெண்களின் ஆடை மற்றும் பர்கா அணிந்து தப்பிச் செல்ல அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் விரைவில் பிடிபடுவார்” என்று தெரிவித்தார்.