புதுடெல்லி: இலங்கை அருகே ஈரான் கப்பலான ஐஆர்ஐஎஸ் தேனா மூழ்கடிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும், ஐஆர்ஐஎஸ் லாவனுக்காக ஈரானியர்கள் கோரிக்கை விடுத்தபோது மனிதாபிமான அணுகுமுறையை மேற்கொண்டோம் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று ரைசினா உரையாடலில் இந்தியப் பெருங்கடலில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்ஜெய்சங்கர், “சர்வதேச கடற்படை மதிப்பாய்வில் பங்கேற்ற ஈரானின் ஐஆர்ஐஎஸ் லாவன் கப்பல், தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்ட பின்னர் கொச்சியில் நிறுத்தப்பட்டது. இலங்கைக்கு தெற்கே ஐஆர்ஐஎஸ் தேனா மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு இந்தியாவை ஈரான் அணுகியது. பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 25 வரை நடந்த சர்வதேச கடற்படை மதிப்பாய்வின் ஒரு பகுதியாக அக்கப்பல் இந்தப் பகுதியில் இருந்தது.
அந்த நேரத்தில் எங்கள் நீர்நிலைக்கு மிக அருகில் இருந்த ஐஆர்ஐஎஸ் லாவன் கப்பல் எங்கள் துறைமுகத்திற்குள் வர விரும்புவதாக ஈரானிய தரப்பிலிருந்து எங்களுக்கு பிப்.28ஆம் தேதி ஒரு செய்தி வந்தது. அவர்கள் தங்களுக்கு சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்தனர். மார்ச் 1 ஆம் தேதி, "சரி, நீங்கள் உள்ளே வரலாம்" என்று நாங்கள் சொன்னோம். பின்னர் அவர்கள் கொச்சி வந்து சேர்ந்தனர்.
மேலும் கப்பலின் 183 இளம் பணியாளர்கள் தற்போது கொச்சியில் உள்ள கடற்படை தளத்தில் தங்கியுள்ளனர். அவர்கள் புறப்பட்டு இங்கு வந்தபோது, நிலைமை முற்றிலும் வேறுபட்டது. அவர்கள் ஒரு கடற்படை மதிப்பாய்வுக்காக வந்தனர், பின்னர் அவர்கள் நிகழ்வுகளின் தவறான பக்கத்தில் சிக்கிக் கொண்டனர்.
எனவே, இந்தக் கப்பல் சிரமத்தில் சிக்கி உள்ளே வர விரும்பியபோது, அனுமதித்தது மனிதாபிமான செயல் என்று நான் நினைக்கிறேன். இன்னொரு கப்பல் இலங்கையில் மூழ்கடிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. எனவே, சட்ட சிக்கல்கள் எதுவாக இருந்தாலும், மனிதாபிமானத்தின் பார்வையில் நாங்கள் அதனை அணுகினோம் என்று நான் நினைக்கிறேன். வேறு என்ன சட்ட சிக்கல்கள் இருந்தாலும், நாங்கள் சரியானதைச் செய்தோம் என்று நான் நினைக்கிறேன்” என்று அமைச்சர் கூறினார்.