புதுடெல்லி: பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமைப் பொறுப்பு வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் தனது முன்னாள் கணவர் மூலம் தனக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக 2015-ம் ஆண்டு மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
பீட்டர் முகர்ஜிக்கு அவரது முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை, ஷீனா முறை தவறி காதலித்ததால் இந்தக் கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இந்திராணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இவர்களுக்கு 2022-ல் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு இந்திராணி முகர்ஜி, உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்திராணி முகர்ஜியின் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை நிராகரித்தனர். மேலும், வழக்கு விசாரணையை, விசாரணை நீதிமன்றத்தில் நடத்துவது தொடர்பான மனுவை இந்திராணி முகர்ஜி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அந்த விசாரணையை உச்ச நீதிமன்றம் நடத்தாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.