புதுடெல்லி: இந்திய - அமெரிக்க வர்த்தக கட்டமைப்பு இடைக்கால ஒப்பந்தத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை வலியுறுத்தும் விதமாக வரும் 12-ம் தேதி தேசிய அளவிலான போராட்டம் நடத்த உள்ளதாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா விவசாய அமைப்பு அறிவித்துள்ளது.
“இந்தியா மற்றும அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகளும் நிறைவான பலன்களை பெறும். குறிப்பாக இந்திய ஏற்றுமதியாளர்கள் அதிக பலன் அடைவார்கள்.
அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட வேளாண் விளைபொருட்கள் இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி வழங்கவில்லை. அமெரிக்காவின் சோளம், அரிசி, கோதுமை, ராகி, தானியங்களை இந்தியாவில் விற்பனை செய்ய எவ்வித சலுகையும் வழங்கவில்லை.
இந்தியாவில் வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், மாம்பழம், கொய்யா, காளான், கோகோ, கடுகு எண்ணெய், அன்னாசி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படும். இந்தியாவில் இறைச்சி, கோழி இறைச்சி, பால் பொருட்கள், சோயாபீன், சர்க்கரை, தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு சிறிய பாதிப்பு கூட ஏற்படாது” என இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் குறித்து சனிக்கிழமை அன்று மத்திய வர்த்தக, தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கினார்.
இந்த சூழலில் சம்யுக்த் கிசான் மோர்ச்சா நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகம் சார்ந்த இடைக்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு, அமெரிக்க விவசாயத் துறையின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. இது அவர்களிடம் முழுவதுமாக சரணடைவதாகும். உலர்த்தப்பட்ட தானியக் கழிவுகள், கால்நடைத் தீவனத்திற்கான சிவப்பு சோளம், பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் ஆகியவை கூட்டறிக்கையில் சேர்க்கப்பட்டு இருப்பதைக் குறிப்பிட்டனர்.
மேலும், ஆப்பிள் மற்றும் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள ஜம்மு காஷ்மீர், இமாச்சல, மகாராஷ்டிரா, குஜராத் மாநில விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர். இந்த இடைக்கால ஒப்பந்தத்தை கண்டித்து வரும் 12-ம் தேதி தேசிய அளவிலான போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இந்தியா-அமெரிக்கா இடையிலான இடைக்கால ஒப்பந்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்.