புதுடெல்லி: இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், ‘‘இந்தியா - நியூசிலாந்து உறவில், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டில் இது ஒரு முக்கிய தருணம். இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் முடிவடைந்ததை அடுத்து, எனது நண்பர் (நியூசிலாந்து) பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனும் நானும் சிறிது நேரத்துக்கு முன்பு மிகச் சிறந்த உரையாடலை மேற்கொண்டோம்.
இருதரப்பு தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கி ஒன்பது மாதங்களில் முடிவடைந்திருப்பது ஒரு வரலாற்று மைல்கல். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வலுவான அரசியல் விருப்பம் இதில் பிரதிபலிக்கிறது. மேம்பட்ட சந்தை அணுகல், ஆழமான தொடர் முதலீடுகள் ஆகியவற்றை இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உறுதி செய்கிறது. இதனால், புதுமைகளைப் படைப்பவர்கள், தொழில்முனைவோர், விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர தொழில்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாகும்.
இந்தியா-நியூசிலாந்து கூட்டாண்மை புதிய உயரங்களை எட்டப் போகிறது. வரும் ஐந்தாண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரட்டிப்பாக்கப் போகிறது. 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு முதலீடுகள் வரப் போகின்றன. நமது திறமையான இளைஞர்கள், ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல், சீர்திருத்தம் சார்ந்த வளர்ச்சி மற்றும் நீண்டகால கூட்டாண்மைக்கு இது வலுவான அடித்தளத்தை அமைக்கப் போகிறது. அதேநேரத்தில், விளையாட்டு, கல்வி, கலாச்சார தொடர்புகள் போன்ற பிற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறோம்’’ என தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘‘நியூசிலாந்து-இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நான் இப்போதுதான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவுக்கான நியூசிலாந்தின் ஏற்றுமதிகளில் 95% பொருட்களுக்கான வரிகளை குறைக்கிறது அல்லது நீக்குகிறது. வரும் 20 ஆண்டுகளில், இந்தியாவுக்கான நியூசிலாந்தின் ஏற்றுமதி ஆண்டுக்கு 1.1 பில்லியன் டாலர் முதல் 1.3 பில்லியன் டாலர் வரை அதிகரிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக அதிகரிப்பு என்பது நியூசிலாந்து மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள், அதிக ஊதியம், அதிக வாய்ப்புகளைக் கொண்டு வரும். இந்த ஒப்பந்தம், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவை மேலும் வலுப்படுத்துகிறது. இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒனறாகும். இது நியூசிலாந்து வணிகங்களுக்கு 140 கோடி இந்திய நுகர்வோரை அணுகும் வாய்ப்பை வழங்குகிறது.
எங்கள் அரசாங்கம் அடிப்படைகளைச் சரி செய்வதிலும், எதிர்காலத்தை உருவாக்குவதிலும் இடைவிடாமல் கவனம் செலுத்துகிறது. இதுபோன்ற புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் நமது பொருளாதாரத்தை வளர்க்க உதவுகின்றன. இதன் மூலம் அனைத்து நியூசிலாந்து மக்களும் முன்னேற முடியு’’ம் என தெரிவித்துள்ளார்.
மொரிஷியஸ், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்க நாடுகள்( EFTA countries), இங்கிலாந்து, ஓமன் ஆகிய நாடுகளுடன் ஏற்கனவே தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ள நிலையில், இந்த பட்டியலில் தற்போது நியூசிலாந்தும் இணைந்துள்ளது.