புதுடெல்லி: இந்திய மருந்துத் துறை, உலகின் மருந்தகம் என்ற நிலையிலிருந்து, தற்போது உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று பெருமிதம் தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா எழுதியுள்ள கட்டுரை ஒன்றைப் பகிர்ந்துள்ள பிரதமர், தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியா இப்போது மலிவு விலையில் மருந்துகளை வழங்கும் உலகளாவிய விநியோகஸ்தர் என்ற நிலையைக் கடந்து, ஆராய்ச்சி சார்ந்த வளர்ச்சியில் தற்போது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. உலகின் மருந்தகம் என்ற நிலையிலிருந்து கண்டுபிடிப்புகளின் மையமாக இந்தியாவின் மருந்துத் துறை முன்னேறி வருகிறது.
தற்போதைய அரசு, விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பயலாஜிக்ஸ், பயோசிமிலர்ஸ் மற்றும் அடுத்த தலைமுறைக்கான நவீன சிகிச்சை முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மேலும், உலகளாவிய மருந்துத் துறைப் போட்டியில் இந்தியா தன்னை எவ்வாறு முன்னிலைப்படுத்தி வருகிறது என்பதை விவரிக்கும் மத்திய அமைச்சர் நட்டாவின் இந்தக் கட்டுரை, அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தொடர்ச்சியான கொள்கை ஆதரவு மற்றும் தொலைநோக்குப் பார்வை காரணமாக, கடந்த சில ஆண்டுகளில் இந்திய மருந்துத் துறையின் தடம் மாறியுள்ளது. இந்தியா இனி பொதுவான ‘ஜெனரிக்’ மருந்துகளை அதிக அளவில் உற்பத்தி செய்வதுடன் மட்டும் நின்றுவிடாமல், காம்ப்ளக்ஸ் மருந்து மேம்பாடு மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சித் திறன்களில் அதிக முதலீடு செய்து வருகிறது. குறிப்பாக, உலகளாவிய மருந்துத் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியைத் தீர்மானிக்கக் கூடிய பயலாஜிக்ஸ் போன்ற பிரிவுகளில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது.
ஜெனரிக் மருந்து உற்பத்தியில் முன்னிலை வகித்ததால் நீண்டகாலமாக இந்தியா உலகின் மருந்தகம் என்று அழைக்கப்பட்டது. தற்போது, அந்த வளர்ச்சியிலிருந்து, புத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்புகளை நோக்கிய வளர்ச்சிக்கு மாற இந்தியா தயாராகிவிட்டது என்று மத்திய அமைச்சர் நட்டா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.