புதுடெல்லி: “உலகின் தவிர்க்க முடியாத வல்லரசாக அமெரிக்கா இருப்பது ஒரு யதார்த்தம். நமது மனதை புண்படுத்தும் சில நடவடிக்கைகளை, சில கருத்துகளை கொண்டுள்ள போதிலும் இந்தியாவால் அமெரிக்காவை புறக்கணித்துவிட முடியாது” என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் ஜி7 உச்சி மாநாடு பங்கேற்பு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான உரையாடல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த சசி தரூர், “ஜி7 என்பது மிகவும் செழிப்பான மேற்கத்திய நாடுகளின் கூட்டமைப்பாகவே நீடிக்கிறது. இந்தியா போன்ற நாடுகளையும் உலகின் முக்கிய பொருளாதார சக்திகளையும் அதில் இணைக்க அவர்கள் முயன்றுள்ளனர். 2004 முதலே அவர்கள் ஜி7 உச்சி மாநாட்டுக்கு நம்மை அழைக்கிறார்கள். ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் நாமும் அதில் பங்கேற்கிறோம். இது ஓர் இயல்பான நடைமுறையே.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ள போதிலும் சீனா அழைக்கப்படுவதில்லை. இந்த வேறுபாட்டை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உலகில் நம்பிக்கை பற்றாக்குறை உள்ளதாக பிரதமர் மோடி கூறிய கருத்து மிகச் சரியானது. இதை நான் நீண்ட காலமாக கூறி வருகிறேன். எனது கட்டுரைகளிலும் எழுதியுள்ளேன். எனது கருதை்தையே அவரும் பிரதிபலித்துள்ளார். நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் பரஸ்பர நம்பிக்கை இல்லாத நிலையிலும், ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையிலும் உள்ளது. நாம் அனைவரும் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளோம்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை மீண்டும் வலுப்படுத்துவதில் மோடி - ட்ரம்ப் சந்திப்பு முக்கிய பங்காற்றியுள்ளது. இரு தரப்பில் இருந்தும் எனக்கு கிடைத்த தகவல்களின்படி, இந்தச் சந்திப்பு மிகவும் சுமுகமான, கனிவான சூழலில் நடைபெற்றுள்ளது.
குறிப்பாக ட்ரம்ப் தனது கருத்துகளில் நட்பான அணுகுமுறையை கடைப்பிடித்தார் என்று அனைவரும் கூறினர். கடந்த ஆண்டு அல்லது அதற்கு முந்தைய காலங்களில் நிலைமை இப்படி இருந்ததில்லை. அந்த விரிசலை சரிசெய்யும் முயற்சியில் இப்போது அனைவரும் ஈடுபட்டுள்ளனர் என்று நான் கருதுகிறேன்.
உலகின் தவிர்க்க முடியாத வல்லரசாக அமெரிக்கா இருப்பது ஒரு யதார்த்தம். நமது மனதைப் புண்படுத்தும் வகையிலான சில நடவடிக்கைகளை, கருத்துகளை கொண்டிருந்தபோதிலும் இந்தியாவால் அமெரிக்காவை புறக்கணித்துவிட முடியாது.
இந்திய மாலுமிகள் விவகாரத்தைப் பொறுத்தவரை பிரதமர் மோடி தனது கருத்தை மிகவும் உறுதியாக முன்வைத்தார். நல்லவேளையாக இப்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். மேலும், 60 நாட்கள் நீடிக்கும் பேச்சுவார்த்தை மூலம் ஒரு முறையான ஒப்பந்தத்தை எட்டுவது குறித்தும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, அமைதி நிலவும் என நாம் நம்புவோம்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் ஒரு தொடக்கம்தான். இந்த ஒப்பந்தம் பொருளாதார தடைகளை நீக்குவதற்கு வழிவகுக்கும். அதற்காக ஒரே இரவில் அற்புதங்கள் நிகழ்ந்துவிடாது. ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கண்ணிவெடிகளை ஈரான் அகற்ற வேண்டும். கப்பல்கள் பாதுகாப்பாக அவற்றை கடந்து செல்ல வேண்டும். எனவே, இன்னும் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன.
60 நாட்களுக்குப் பிறகு ஈரான் கப்பல் போக்குவரத்துக் கட்டணம் வசூலிக்குமா என்பது குறித்து சந்தேகங்கள் உள்ளன. அப்படி நடந்தால் அது ஒட்டுமொத்த உலக்கும் ஒரு பெரிய சிக்கலாக அமையும். ஏனெனில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உருவாக்கவில்லை. பனாமா கால்வாய், சூயஸ் கால்வாய் போல இது மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல. அந்த கால்வாய்களை உருவாக்க பெருமளவு பணம் செலவிடப்பட்டதால் அங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி என்பது இயற்கையான நீர்வழிப் பாதையாகும். எனவே, எந்த ஒரு நாடும் இதற்கு கட்டணம் வசூலிக்க உரிமை கோர முடியாது.
ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, அனைத்து தடைகளும் நீக்கப்பட்ட பிறகு ஈரான் மீண்டும் சர்வதேச வர்த்தகத்தில் ஒரு சாதாரண பங்கேற்பாளராக மாற முடியும். தற்போது நம்மால் சபஹார் துறைமுக திட்டத்தைக் கூட முன்னெடுக்க முடியவில்லை. தடைகள் நீக்கும்போது ஈரான் தான் விரும்பும் பல முக்கிய பலன்களைப் பெறும்.
அதேநேரத்தில், அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். எனவே, இந்த ஒப்பந்தத்தில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. எனினும், அடுத்த 60 நாட்களில் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தே இதன் வெற்றி அமையும்” என்று சசி தரூர் தெரிவித்தார்.