புதுடெல்லி: இண்டியா கூட்டணி அவசர சிகிச்சை பிரிவில் உள்ளது என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் சார்பில் தலைமைத்துவம் தொடர்பான உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பேசியதாவது: தேர்தலின்போது பாஜக வாக்கு திருட்டில் ஈடுபடுவதாகவும் மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறுவதாகவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இதில் எனக்கு உடன்பாடு இல்லை.
நாடு முழுவதும் நடைபெறும் தேர்தல்களில், தங்கள் வாழ்க்கையே இதில்தான் உள்ளது என்று கருதி பாஜகவினர் தீவிரமாக பணியாற்றுகின்றனர். அதனால்தான் அவர்களால் வெற்றி பெற முடிகிறது. பிரதமரும், அவரது சகாக்களும் தேர்தலுக்காக 24/7 உழைப்பது போல எதிர்க்கட்சித் தலைவர்கள் உழைப்பது இல்லை.
இண்டியா கூட்டணிக் கட்சிகளுக்கிடையே ஒற்றுமை இல்லை. இக்கூட்டணி இப்போது அவசர சிகிச்சை பிரிவில் உள்ளது. அதற்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்கொள்ள இண்டியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து முடிவுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.