பாட்னா: பிஹார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, தான் வசித்து வரும் அரசு பங்களாவை விட்டு வெளியேற மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
பிஹார் முன்னாள் முதல்வரும் ஆர்ஜேடி மூத்த தலைவருமான ராப்ரி தேவி, பாட்னாவில் ஆளுநர் மாளிகை அருகில் 10, சர்குலர் ரோடு முகவரியில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் நிதிஷ் குமார் தலைமையிலான முந்தைய அரசால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, கட்டிட கட்டுமானத் துறை மே 27 தேதியிட்ட உத்தரவின் மூலம், ராப்ரி வசிக்கும் பங்களாவை அமைச்சர் நந்த் கிஷோர் ராமுக்கு ஒதுக்கியுள்ளது.
இது குறித்து ராப்ரி தேவியிடம் செய்தியாளர்கள் நேற்று கேட்டபோது கடும் கோபமடைந்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘சம்ராட் சவுத்ரி முதல்வரானதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். அவரது அரசு என்னை அரசு பங்களாவில் இருந்த பலவந்தமாக வெளியேற்றட்டும். நான் காலி செய்யப் போவதில்லை‘‘ என்றார்.
சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராப்ரி தேவியை, கடந்த ஆண்டு நவம்பரிலேயே வீட்டை காலி செய்யுமாறு அரசு கேட்டுக் கொண்டது. அப்போது அது அப்போதைய துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், ராப்ரி தேவி மறுத்ததால் சின்ஹாவால் அங்கு மாற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.