ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தீவிரவாதத் தாக்குதல் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதில் தொடர்புடைய தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியிருப்பதாவது: மத அடையாளத்தின் அடிப்படையில் அப்பாவிப் பொதுமக்கள் குறிவைத்து கொல்லப்பட்ட இந்த சம்பவம் ராணுவத்திற்கு ஒரு சவாலாகவே அமைந்தது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் மட்டும் ராணுவம் உறுதியாக இருந்து ஆபரேஷன் மஹாதேவை முன்னெடுத்தது.
பஹல்காம் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே ராணுவத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர். அங்கிருந்த சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடிப்படையில், இத்தாக்குதலில் 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. மனிதவள உளவு மற்றும் தொழில்நுட்ப உளவு தகவல்களை ஒருங்கிணைத்ததில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த சுலைமான் ஷா, ஹம்சா ஆப்கானி மற்றும் ஜிப்ரான் பாய் ஆகியோரே இக்கொடூரத்தின் பின்னணியில் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, சமீப காலங்களில் இல்லாத வகையில் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட தேடுதல் வேட்டை தொடங்கியது. தீவிரவாதிகள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறாதபடி எல்லைகள் சீல் வைக்கப்பட்டன. தெற்கு காஷ்மீரின் ஹபட்னர், புக்மார் மற்றும் ட்ரால் ஆகிய உயரமான பகுதிகள் வழியாக அவர்கள் தப்பிச் செல்வதை ராணுவம் கண்டறிந்தது. அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான டச்சிகாம் வனப்பகுதிக்குள் அவர்கள் தஞ்சம் புகுந்தனர்.
மே மாத இறுதியில், தீவிரவாதிகள் இந்த கடினமான நிலப்பரப்பைப் பயன்படுத்தி தப்பிக்க முயல்வதும், வரவிருக்கும் ஆண்டு யாத்திரைக்கு இடையூறு விளைவிக்க அவர்கள் திட்டமிடுவதும் உறுதியானது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ராணுவம், தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியது. இதில் எலைட் பாரா சிறப்புப் படைப் பிரிவினர் களமிறக்கப்பட்டனர்.
இந்த ஆபரேஷனில், ராணுவம், ஜம்மு - காஷ்மீர் போலீஸ் மற்றும் மத்திய பாதுகாப்புப் படைகள் ஒன்றிணைந்து செயல்பட்டன. ட்ரோன்கள், தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் மற்றும் எலக்ட்ரோ-ஆப்டிகல் சென்சார்கள் போன்ற நவீன கருவிகள் மூலம் தீவிரவாதிகளின் நடமாட்டம் துல்லியமாகக் கண்காணிக்கப்பட்டது.
ஜூலை 10, 2025 அன்று ஆபரேஷன் மஹாதேவ் அதன் இறுதி கட்டத்தை எட்டியது. லிட்வாஸ், ஹர்வான் மற்றும் டச்சிகாம் பகுதிகளில் பெரிய அளவிலான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 93 நாட்கள் நீடித்த இந்த வேட்டையில், சுமார் 250 கி.மீ தூரம் வரை தீவிரவாதிகள் துரத்தப்பட்டனர். இறுதியில் அவர்கள் 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குள் சுற்றிவளைக்கப்பட்டனர்.
ஜூலை 28, 2025 அன்று, பாரா சிறப்புப் படை குழுவினர் மிகவும் ரகசியமான முறையில் தாக்குதலைத் தொடங்கினர். உயிரைப் பணயம் வைத்து, கரடுமுரடான பாதையில் 10 மணி நேரம் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று தீவிரவாதிகளை நெருங்கினர். மின்னல் வேகத்தில் நடத்தப்பட்ட இந்த துல்லியமான தாக்குதலில் மூன்று தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதன் மூலம் பஹல்காம் படுகொலைக்குக் காரணமானவர்கள் நீதியின் முன் தண்டிக்கப்பட்டனர். ராணுவத்தின் மன உறுதி, தொழில்முறை நேர்த்தி மற்றும் தேசப் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு ஆபரேஷன் மஹாதேவ் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.