ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் சிகார் பகுதியை சேர்ந்த ஒரு மாணவர், கேரளாவில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். கடந்த 1-ம் தேதி அவர் சிகாரில் உள்ள தனது உறவினருக்கு கையால் எழுதப்பட்ட மாதிரி வினாத்தாளை அனுப்பி உள்ளார். இந்த வினாத்தாளை படித்தால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம் என்றும் கூறியுள்ளார்.
கடந்த 2-ம் தேதி சிகாரில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மைய உரிமையாளருக்கு மாதிரி வினாத்தாள் கிடைத்திருக்கிறது. அந்த வினாத்தாளை அவர் தனது மாணவ, மாணவியருக்கு வழங்கி உள்ளார். இதே வினாத்தாளை சிலர் சமூக வலைதளங்களில் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்துள்ளனர். கடந்த 3-ம் தேதி நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளும், சிகாரில் பரவிய மாதிரி வினாத்தாள் கேள்விகளும் ஒன்றுபோல இருப்பதை சிகாரில் உள்ள மற்றொரு தேர்வு பயிற்சி மைய உரிமையாளர் கண்டுபிடித்தார்.
அதாவது நீட் நுழைவுத் தேர்வில் 180 கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சுமார் 150 கேள்விகள் மாதிரி வினாத்தாளில் அப்படியே இடம்பெற்றிருந்தன. இதுகுறித்து சிகார் நீட் தேர்வு பயிற்சி மைய உரிமையாளர், உத்யோக் நகர் போலீஸ் நிலையம் மற்றும் என்டிஏ அமைப்பிடம் புகார் அளித்தார். கடந்த 7-ம் தேதி வினாத்தாள் கசிவை என்டிஏ ஒப்புக் கொண்டது. ராஜஸ்தான், உத்தராகண்டில் வினாத்தாள் கசிந்திருக்கிறது என்றும் இதுகுறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்க பரிந்துரை செய்திருப்பதாகவும் என்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 8-ம் தேதி மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் ராஜஸ்தான் போலீஸார் இணைந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சிகார், ஜுன்ஜுனு மற்றும் உத்தராகண்ட் தலைநகர் டேராடூனை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் பலரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராஜஸ்தானின் சிகாரில் பரவிய அதே மாதிரி வினாத்தாள் மற்றொரு சமூகவிரோத கும்பலுக்கும் கிடைத்திருக்கிறது.
அந்த கும்பல் மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் அண்மையில் கூடி சதித் திட்டம் தீட்டியிருக்கிறது. இந்த கும்பல் மூலம் மகாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திரா, தெலங்கானா, காஷ்மீர், ராஜஸ்தான், பிஹார், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நீட் மாதிரி வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
2 முக்கிய குற்றவாளிகள் கைது
இதுதொடர்பாக ராஜஸ்தான் போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: ராஜஸ்தானின் கோட்டா நகரம் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களின் தலைநகராக கருதப்படுகிறது.
இங்கு ஏராளமான பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. தற்போது கோட்டா நகருக்கு இணையாக ராஜஸ்தானின் சிகார் நகரும் வளர்ந்து வருகிறது. இந்த நகரில் சுமார் 20-க்கும் மேற்பட்ட முன்னணி நீட், ஜேஇஇ பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வினாத்தாள் கசிவு தொடர்பாக சிகார் நகரில் ஆர்.கே.கன்சல்டன்சி என்ற நிறுவனத்தை நடத்தி வந்த ராகேஷ், ஜெய்ப்பூரை சேர்ந்த மணீஷ் யாதவ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இருவரும் வினாத்தாள் கசிவு மோசடியின் மூளையாக செயல்பட்டிருப்பதாக சந்தேகிக்கிறோம். இவர்களில் ராகேஷுக்கும் கேரளாவில் எம்பிபிஎஸ் படிக்கும் சிகார் மாணவருக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ராகேஷும் மணீஷ் யாதவும் கையால் எழுதப்பட்ட நீட் மாதிரி வினாத்தாளை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். அவர்கள் எத்தனை பேருக்கு வினாத்தாளை விற்பனை செய்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது.
அவர்கள் மூலம் வினாத்தாள் கிடைக்கப் பெற்றவர்கள் அவரவர் விருப்பம்போல சமூக வலைதளங்களில் வினாத்தாளை விற்பனை செய்துள்ளனர். தற்போது சிபிஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டு இருப்பதால் அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ அதிகாரிகளிடம் வழங்குவோம். சிபிஐ விசாரணையில் மேலும் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். இவ்வாறு ராஜஸ்தான் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.