குவாஹாட்டி: அசாம் முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று பதவியேற்றார். அவருடன் மேலும் 4 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
நடந்து முடிந்த அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் (என்டிஏ) கூட்டணி, மொத்தம் உள்ள 126-ல் 101 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில், பாஜக 81 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான போடோலாந்து மக்கள் முன்னணி மற்றும் அசாம் கன பரிஷத் ஆகியவை தலா 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதன் மூலம் மூன்றில் இரண்டு பங்கு வெற்றியைப் பெற்ற இக்கூட்டணி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் குவாஹாட்டியில் நடைபெற்ற என்டிஏ எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யாவை சந்தித்த ஹிமந்த பிஸ்வா சர்மா, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், ஹிமந்த பிஸ்வா சர்மா 2-வது முறையாக முதல்வராக இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன், பாஜகவைச் சேர்ந்த ரமேஷ்வர் தெலி, அஜந்தா நியோக் ஆகியோரும், அசாம் கன பரிஷத்தைச் சேர்ந்த அதுல் போரா, போடோலாந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த சரண் போரா ஆகிய 4 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
பவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.