சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் கார் கருப்பு நிற கவர்களால் மூடப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட காட்சி சமூகவலை தளங்களில் வைரலாகி உள்ளது.
புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று டெல்லி வந்தடைந்தார். வெளிநாட்டு பயணங்களுக்கு அவர், போயிங் 747-8 ரக விமானத்தை பயன்படுத்தி வருகிறார். சீன அதிபரின் பாதுகாப்புக்காக இந்த விமானத்தில் ஏவுகணைகள், அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.
அதிபர் ஜி ஜின்பிங், ஹாங்கி என்701 என்ற சிறப்பு காரை பயன்படுத்தி வருகிறார். சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்தக் கார் 18 அடி நீளம், 6.5 அடி அகலம் கொண்டதாகும். குண்டு துளைக்காத கண்ணாடி, பஞ்சர் ஆகாத டயர்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
ஏவுகணை, பீரங்கி, துப்பாக்கிச்சூடு தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் கார் வலுவாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 10 நாட்களுக்கு முன்பே சரக்கு விமானம் மூலம் ஹாங்கி என்701 வகையைச் சேர்ந்த இரு கார்கள் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன. அதோடு அதிநவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் விமானத்தில் வந்து சேர்ந்தன.
தாஜ் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்கி உள்ளார். அந்த ஓட்டல் முழுவதும் அங்குலம், அங்குலமாக தீவிர சோதனை நடத்தப்பட்டு உள்ளது. ஓட்டலின் மேலே விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் சுமார் 24 மணி நேரம் டெல்லியில் தங்கியிருக்க உள்ளார். அதுவரை அவருக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என்று டெல்லி போலீஸ் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிக்ஸ் மாநாட்டை ஒட்டி தலைநகர் டெல்லியில் 15,000-க்கும் மேற்பட்ட போலீஸாரும் மத்திய பாதுகாப்புப் படைகளை சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் ட்ரோன் எதிர்ப்பு கவச வாகனங்கள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன.