இந்தியா

மேற்கு வங்க என்கவுன்டரில் கொல்லப்பட்ட மகனின் முகத்தை பார்க்க மறுத்த தாய்

மோகன் கணபதி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாஸ் மண்டலின் முகத்தைக் காணவோ, உடலை பெற்றுக்கொள்ளவோ விரும்பவில்லை என்று அவரது தாய் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவின் புறநகர் பகுதியான பருய்பூரைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஜூலை 4-ம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். ஜூலை 5-ம் தேதி, பருய்பூரில் உள்ள ஒரு குளத்தில் சாக்குப்பையில் அடைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குற்றத்தில் ஈடுபட்டுவர்களைக் கைது செய்து கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சிலர், ரயில் தண்டவாளங்கள் மற்றும் காவல் துறை வாகனங்களை சேதப்படுத்தினர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பிரபாஸ் மண்டல், ஆனந்த சர்தார், திவாகர் சர்தார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். கபீர் மொல்லா என்ற நபரும் பிடிபட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபராகக் கருதப்பட்ட பிரவாஷ் மோண்டல், சம்பவம் நடந்த இடத்துக்கு நேற்று நள்ளிரவு அழைத்துச் செல்லப்பட்டார்.

சம்பவம் நடந்த விதத்தை அறிந்து கொள்ளும் அந்த நடவடிக்கையின்போது, பிரவாஷ் மண்டல், போலீஸாரின் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் பிரபாஸ் மண்டல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, இன்று காலை பிரபாஸ் மண்டலின் வீட்டுக்குச் சென்ற போலீசார், என்கவுன்டரில் அவர் கொல்லப்பட்டது குறித்து தெரிவித்துள்ளனர்.

மேலும், அவரைப் பார்க்க அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளனர். அப்போது பிரவாஷ் மண்டலின் தாய், “அவன் முகத்தைப் பார்க்க நான் விரும்பவில்லை. உடலைப் பெற்றுக்கொள்ள நான் செல்ல மாட்டேன். என் குடும்பத்தில் உள்ள யாரும் செல்ல மாட்டார்கள். அவன் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருந்தான். அவன் எனது அறிவுரைகளை ஒருபோதும் கேட்டதில்லை” என தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், போலீசார் அவரை சமாதானப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

SCROLL FOR NEXT