டெல்லியில் இருந்து தென்னாப்பிரிக்கா புறப்பட்ட பிரதமர் மோடி
புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு புறப்பட்டுச் சென்றார்.
புறப்படும் முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தென்னாப்பிரிக்காவின் தலைமையின் கீழ், ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் இருபதாவது ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள, சிரில் ராமபோசாவின் அழைப்பின் பேரில், நவம்பர் 21 முதல் 23 வரை தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொள்கிறேன்.
ஆப்பிரிக்காவில் நடைபெறும் முதல் ஜி20 உச்சிமாநாடு இது என்பதால், ஒரு சிறப்புமிக்க உச்சிமாநாடாக இருக்கும். 2023-ம் ஆண்டில் இந்தியா ஜி20 தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் உறுப்பினராகியது.
இந்த உச்சிமாநாடு முக்கிய உலகளாவிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்த ஆண்டு ஜி20-ன் கருப்பொருள் 'ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நிலைத்தன்மை' ஆகும். இதன் மூலம் இந்தியாவின் புதுடெல்லி, பிரேசிலின் ரியோ- டி -ஜெனிரோவில் நடைபெற்ற முந்தைய உச்சிமாநாடுகளின் முடிவுகளை தென்னாப்பிரிக்கா முன்னெடுத்துச் சென்றுள்ளது. 'வசுதைவ குடும்பகம்' மற்றும் 'ஒரே பூமி, ஒரே குடும்பம் மற்றும் ஒரே எதிர்காலம்' என்ற நமது தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தியாவின் பார்வையை இந்த உச்சிமாநாட்டில் முன்வைப்பேன்.
மாநாட்டில் பங்கேற்கும் பிற நாடுகளின் தலைவர்களுடனான எனது உரையாடல்களையும், உச்சிமாநாட்டின் போது திட்டமிடப்பட்டுள்ள 6-வது இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா (ஐபிஎஸ்ஏ) உச்சிமாநாட்டில் பங்கேற்பதையும் நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
இந்தப் பயணத்தின் போது, இந்தியாவுக்கு வெளியே உள்ள மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோருடனான எனது உரையாடலையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.