கோப்புப்படம்
புதுடெல்லி: நாடு முழுவதும் பயிர் காப்பீடு திட்டத்துக்கான பிரிமியம் தொகையில் மத்திய அரசு 40%, மாநில அரசு 50% விவசாயி 10% செலுத்துகின்றனர். வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட காரணத்தால் விளைச்சல் பாதிக்கப்படும்போது விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால் அந்தத் தொகை டிசம்பரில் குறைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
மஹோபா மாவட்டம் சந்தோஷ்புரா கிராமத்தில், 113 விவசாயிகளுக்கு ரூ.55 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டதாகக் காட்டப்பட்டது. ஆனால், விசாரணை தொடங்கிய பிறகு, டிசம்பர் 10 அன்று, அதே எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு ரூ.9 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டதாக இணையதளத்தில் காட்டப்பட்டது. இதேபோல், லுஹாரி கிராமத்தில் ஆகஸ்ட் மாதம் ரூ.1.47 கோடி வழங்கப்பட்டதாகக் காட்டப்பட்டது, அது டிசம்பரில் ரூ.39 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
குல்பஹார் தாலுகாவில் உள்ள இந்தோரா கிராமத்தில், ரூ.1.1 கோடி காப்பீட்டுத் தொகை விநியோகிக்கப்பட்டது. இந்தக் கிராமத்தில் 33 பேர் ரூ.83.49 லட்சம் பெற்றுள்ளனர். இந்த 33 பேரில் ஒருவர் கூட இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்.
இதுகுறித்து மஹோபாவில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கத் தலைவர் குலாப் சிங் கூறுகையில், ‘‘விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் காப்பீடு செய்யப்பட்ட நிலப்பரப்பு ஆகியவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பயிர் காப்பீட்டு திட்டத்தில் தேசிய அளவில் பல ஊழல் நடைபெறுவதாக சந்தேகம் உள்ளது. இதன் மீது மத்திய அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.
வாகன காப்பீடு திட்டத்தில் தனி நபர் பயனடைய முடியும். ஆனால், பயிர் காப்பீடு திட்டத்தில் தனிநபரின் பயிர் பாதிக்கப்பட்டால் காப்பீடு கிடைப்பதில்லை. ஒரு கிராமமே பாதிக்கப்பட்டால்தான் பலன் கிடைக்கிறது. மேலும் அனைவருக்கும் ஒரே தொகை கிடைப்பது குறிப்பிடத்தக்கது.