கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள யுவபாரதி மைதானத்தில் கடந்த ஆண்டு டிச.13-ல் நடந்த நிகழ்ச்சியில் பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் கடும் நெரிசல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டது. இதனால், டிக்கெட் வாங்கியிருந்த ரசிகர்களால் இந் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த தேசிய விளையாட்டு தின விழாவில் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி பேசும்போது, “போதிய பாதுகாப்பு வசதியின்மை, விஐபிகளின் தலையீடு மற்றும் மோசமான நிர்வாகமே மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்குக் காரணம். இதனால் பாதிக்கப்பட்ட 33,000 ரசிகர்களுக்கு, அவர்கள் நுழைவுச் சீட்டுக்குச் செலுத்திய ரூ.4,000, ரூ.6,000 கட்டணத்தை விளையாட்டுத் துறை நிதி மூலம் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், முந்தைய ஆட்சியில் விளையாட்டுத் துறை புறக்கணிக்கப்பட்டதால் வீரர்களின் வேலைவாய்ப்புக் கோப்புகள் 11 ஆண்டுகளாக தூசு படிந்து கிடந்ததாகச் சாடினார். இந்நிலையை மாற்ற 8 மாதங்களுக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தின் 294 தொகுதிகளில் மினி விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் திட்டத்தில் முதற்கட்டமாக 100 அரங்கங்கள் கட்டப்படும் என்றும் உறுதியளித்தார்.