இந்தியா

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு 5 நாட்கள் இலவச சிகிச்சை: கேரள பட்ஜெட்டில் அறிவிப்பு!

டெக்ஸ்டர்

திருவனந்தபுரம்: கேரளாவில் சாலை விபத்துகளில் சிக்கி காயமடைபவர்களுக்கு விபத்து நடந்த முதல் ஐந்து நாட்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அம்மாநில நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள நிதி அமைச்சர் கே.என். பாலகோபால் இன்று (ஜனவரி 29) 2026-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் 'கேரளா விபத்து காப்பீட்டுத் திட்டம்' என்ற அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. விபத்து நடந்த உடனேயே சிகிச்சைக் கட்டணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பதே இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

          

அதன்படி கேரளாவில் சாலை விபத்துகளில் சிக்கி காயமடைபவர்களுக்கு விபத்து நடந்த முதல் ஐந்து நாட்களுக்கு முற்றிலும் அரசு சார்பில் இலவச சிகிச்சை அளிக்கப்படும். அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இந்த இலவச சிகிச்சை வசதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின் தீவிரத்தைப் பொறுத்து, முதல் 5 நாட்களுக்கான அவசரச் சிகிச்சைக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், ஆம்புலன்ஸ் வசதிகளை அதிகப்படுத்தவும் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விபத்து காலங்களில் உயிரிழப்புகளைக் குறைப்பதில் முதல் 48 முதல் 72 மணிநேரம் மிகவும் முக்கியமானது என்பதால், 5 நாட்கள் இலவச சிகிச்சை என்ற இந்த அறிவிப்பு கேரள மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT