இந்தியா

ஹைதராபாத் - ஜெய்ப்பூர் விரைவு ரயிலின் ஏசி பெட்டிகளில் தீ விபத்து - யாருக்கும் பாதிப்பில்லை

வெற்றி மயிலோன்

ஹைதராபாத்: ஹைதராபாத்தின் நம்பள்ளி ரயில் நிலையத்தில் இன்று மாலை ஹைதராபாத் – ஜெய்ப்பூர் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு ஏசி பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இன்று (மே 15) இரவு 7 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து ஜெய்ப்பூருக்குப் புறப்படுவதற்குச் சற்று முன்பு, அந்த ரயிலின் 3-அடுக்கு ஏசி வசதி கொண்ட பி1 மற்றும் பி2 பெட்டிகளில் தீவிபத்து ஏற்பட்டது.

தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் நம்பள்ளி ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்து உடனடியாகத் தீயணைப்புப் பணியைத் தொடங்கினர். மூன்று தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடனடியாக அருகிலிருந்த பெட்டிகளில் இருந்து பயணிகளை வெளியேற்றிய ரயில்வே ஊழியர்கள், தீயைக் கட்டுப்படுத்துவதில் அவசரகாலக் குழுக்களுக்கு உதவினர்.

தீ விபத்துக்கு காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விரிவான விசாரணையை தொடங்கியுள்ளனர்.

SCROLL FOR NEXT