பிவாடி: ராஜஸ்தானின் பிவாடியில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று (திங்கள்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பிவாடி நகரின் குஷ்கேரா-கரோலி தொழில்துறை பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், இரண்டு தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து பற்றி பேசிய கூடுதல் மாவட்ட நீதிபதி சுமிதா மிஸ்ரா, “அந்தப் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தீ விபத்து குறித்து அறிந்து உடனடியாக மீட்புப் பணியை மேற்கொண்டனர். இந்த ரசாயன ஆலையில் நடந்த தீவிபத்தில் ஒன்பது பேர் உள்ளே சிக்கினர். இதில் இதுவரை ஏழு உடல்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இருவரை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன” என்றார்.
முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கர்நாடகாவின் பசராலுவில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஒரு ரசாயன சேமிப்பு தொட்டி வெடித்ததில் பிஹாரைச் சேர்ந்த இரண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.