புதுடெல்லி: டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது, 'வந்தே மாதரம்' பாடல் பாடியதில் சர்ச்சை எழுந்ததாகக் கூறி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது கர்நாடகா, டெல்லியில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "நாங்கள் மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும் பாடிய அதே வந்தே மாதரம் பாடலைத்தான் பாடினோம்.
கடந்த 18 ஆண்டுகளாக நாங்கள் இதையேதான் பாடி வருகிறோம். வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசின் போதும், நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த 12 ஆண்டுகளிலும்கூட இதே வந்தே மாதரம் தான் பாடப்பட்டது.
இது குற்றம் என்றால், கடந்த 18 ஆண்டுகளாக இந்த குற்றம்தான் நடந்து வருகிறது. அப்படி பார்த்தால், முதலில் மகாத்மா காந்தி மற்றும் நேரு மீது வழக்கு பதிவு செய்யுங்கள்" என்றார். அரசியல் காரணங்களுக்காகவும், மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவுமே பாஜக இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.