மசூதி கட்ட செங்கல்லுடன் வந்த ஹுமாயூனின் ஆதரவாளர்கள்.
புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தின் பரத்பூர் தொகுதி எம்எல்ஏ ஹுமாயூன் கபீர். இவர் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை போலவே தனது தொகுதியில் மசூதி கட்டுவதாக அறிவித்தார்.
அதற்கான அடிக்கல் நாட்டு விழா, டிசம்பர் 6-ம் தேதி நடைபெறும் என்று கடந்த ஆண்டு தெரிவித்தார். இதுபோல் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்ததால், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஹுமாயூன் அண்மையில் நீக்கப்பட்டார். எனினும், திட்டமிட்டபடி நேற்று டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி கட்டுவதற்காக ஹுமாயூன் அடிக்கல் நாட்டினார்.
முர்ஷிதாபாத்தின் பெல்தங்காவில் நடைபெற்ற விழாவில், முக்கிய மவுலானாக்கள் மற்றும் ஹுமாயூனின் ஆதரவாளர்கள், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முஸ்லிம்கள் பங்கேற்றனர். அவர்களில் பலர் மசூதி கட்ட செங்கற்களை கொண்டு வந்தனர். இந்நிகழ்ச்சியால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கையாக முதல்வர் மம்தா பானர்ஜி அரசு பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்திருந்தது.
ஹுமாயூன் கபீர் கூறும்போது, ‘‘பெல்தங்காவில் விரைவில் பாபர் மசூதியை திறப்பேன். மேற்கு வங்க காவல் துறையினர் எனக்கு ஆதரவும் பாதுகாப்பும் அளிக்கின்றனர். அவர்களுக்கு நன்றி. முஸ்லிம் சமூகத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘முதல்வர் மம்தா பானர்ஜி இந்த நிகழ்வை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துகிறார். முர்ஷிதாபாத் வகுப்புவாத ரீதியாக மிகவும் பதற்றத்துக்கு உரியது. நிலைமை மோசமடைந்தால் அது தேசிய நெடுஞ்சாலை 12-ஐ பாதிக்கும். மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்’’ என்று எச்சரித்தார்.
மாநில பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ் கூறும்போது, ‘‘இந்த சம்பவம் முற்றிலும் வாக்கு வங்கி அரசியலின் ஒரு பகுதி’’ என்று கூறினார்.