புதுடெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் அசாம், மேற்கு வங்கத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (யுடிஎப்) வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது.
கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் கடந்த 23-ம் தேதி முதல் கட்ட தேர்தலும், நேற்று 2-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று வெளியாயின. ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் கேரளாவில் காங். தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 78 முதல் 90 இடங்களை கைப்பற்றும் எனவும், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) 49 முதல் 62 இடங்களை கைப்பற்றும் எனவும், பாஜக 3 இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவித்துள்ளது.
பீப்பிள்ஸ் இன்சைட் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் யுடிஎப் 66 முதல் 76 இடங்களையும், எல்டிஎப் 58 முதல் 68 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் யுடிஎப் 75 முதல் 85 இடங்களையும், எல்டிஎப் 55 முதல் 65 இடங்களையும் கைப்பற்றும் எனவும் பாஜக 3 இடங்களை கைப்பற்றலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் அசாம் மாநிலத்தில் பாஜக 88 முதல் 100 இடங்களில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 24 - 36 இடங்களில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளது.
மேட்ரிஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக அணி 85 முதல் 95 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான அணி 25 முதல் 32 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
பீப்பிள்ஸ் இன்சைட் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக அணி 88 முதல் 96 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான அணி 15 முதல் 26 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
மேட்ரிஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் மேற்கு வங்கத்தில் பாஜக 146 முதல் 161 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 125 முதல் 140 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. பி-மார்க் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக அணி 150 முதல் 175 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 118 முதல் 138 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் திரிணமூல் காங்கிரஸ் 177 முதல் 187 இடங்களையும், பாஜக அணி 95 முதல் 110 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.