கவுரவ் கோகோய்

 
இந்தியா

“கருத்துக்கணிப்புகள் தொலைக்காட்சி விவாதங்களுக்கு மட்டுமே” - கவுரவ் கோகோய் கடும் தாக்கு

வெற்றி மயிலோன்

குவாஹாட்டி: “கருத்துக் கணிப்புகள் தொலைக்காட்சி விவாதங்களுக்காக மட்டுமே பயன்படுபவை. மக்களின் உண்மையான தீர்ப்பு வாக்குகளை எண்ணும்போதுதான் வெளிப்படும்” என்று அசாம் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் தெரிவித்துள்ளார்.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள் கிழமை (மே 4) நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான அரசே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், மாநிலம் முழுவதும் கடும் அரசியல் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளன.

இதுகுறித்து பேசிய அசாம் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய், “கருத்துக் கணிப்புகள் என்பவை முதன்மையாகத் தொலைக்காட்சி விவாதங்களுக்காக மட்டுமே பயன்படுபவை. எங்களைப் பொறுத்தவரை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் அசாம் மக்கள் வழங்கிய தீர்ப்பே முக்கியமானது. உண்மையான முடிவு மே 4-ஆம் தேதிதான் தெரியவரும்; நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பு குறித்து மேற்கு வங்கத்தை போலவே அசாமிலும், எங்கள் வேட்பாளர்களிடமிருந்து ஏராளமான புகார்களைப் பெற்றுள்ளோம். இந்தப் பிரச்சினைகள் கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளன, நாங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தியுள்ளோம். மேலும், இது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம்.

மாற்றத்திற்கு ஆதரவாக அசாம் ஒரு மகத்தான தீர்ப்பை வழங்கும். பாஜக இதை உணராமல் இருக்கலாம். ஆனால் இந்த முறை அசாம் மக்கள் மாற்றத்திற்காக வலுவாகவும், அமைதியாகவும் வாக்களித்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT