புதுடெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் வாக்குப்பதிவு தினத்தன்று தினக்கூலிகள், தற்காலிகப் பணியாளர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘1951ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 135பி-ன்படி எந்த ஒரு வணிகம், வர்த்தகம், தொழில்துறை நிறுவனம் அல்லது வேறு ஏதேனும் அமைப்பில் பணிபுரிபவர்களில் வாக்களிக்கத் தகுதியுள்ள ஒவ்வொரு நபருக்கும் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும். இற்காக எந்த பிடித்தமும் செய்யப்படாது. இந்த விதிகளை மீறும் எந்த ஒரு உரிமையாளரும் அபராதத்துக்கு உள்ளாவார்.
தங்கள் தொகுதிக்கு வெளியே அமைந்துள்ள தொழிற்சாலை அல்லது வணிக நிறுவனங்களில் பணிபுரியும் அல்லது வேலை செய்யும் வாக்காளர்கள், தேர்தல் நடைபெறும் தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்திருந்தால், வாக்குப்பதிவு நாளன்று தங்களது வாக்குகளைச் செலுத்துவதற்கு ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெறும் உரிமை அவர்களுக்கு உண்டு. அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் இதை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த அறிவிப்பு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்குப் பொருந்தும். மேலும், 8 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற உள்ள கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய ஆறு மாநிலங்களுக்கும் இது பொருந்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம், கேரளா, புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கோவா, கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் இந்த தேதியில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் மற்றும் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் இடைத் தேர்தல் ஆகியவ ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.