புதுடெல்லி: மே.வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு முதல்வர் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எஸ்ஐஆருக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில் எஸ்ஐஆர் தொடர்பாக தவறான நடத்தை, கடமை தவறுதல் மற்றும் சட்டப்பூர்வ அதிகாரங்களை தவறாக பயன்படுத்துதல் ஆகிய காரணங்களுக்காக உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள் (AEROs) மட்டத்தில் உள்ள மே.வங்க அதிகாரிகள் 7 பேரை உடனடியாக இடைநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்படுவதை உறுதி செய்யுமாறு மே.வங்க தலைமைச் செயலாளருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.