ஜகதால்பூர் (சத்தீஸ்கர்): பாதுகாப்புப் படையினரின் வீரம், துணிச்சல், ஈடு இணையற்ற தியாகத்தின் காரணமாகவே மார்ச் 31 என்ற காலக்கெடுவுக்கு முன்பாகவே நாட்டில் இருந்து நக்ஸலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜகதால்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, “நக்ஸல் இல்லாத இந்தியா என்ற பிரச்சாரத்தில் சில தேதிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. டிசம்பர் 13, 2023 சத்தீஸ்கரில் பாஜக அரசு பதவியேற்ற நாள். அன்றுதான் நக்ஸலிசத்தை முழுமையாக ஒழிப்பதற்கான உறுதியான பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
அடுத்து ஆகஸ்ட் 24, 2024. அன்றுதான், மார்ச் 31, 2026-க்குள் நாட்டை நக்ஸல் இல்லாத நாடாக மாற்றத் தீர்மானிக்கும் வகையில் அனைத்து மாநிலங்களின் காவல்துறை தலைமை இயக்குநர்களின் கூட்டம் கூட்டப்பட்டது. மூன்றாவது தேதி, மார்ச் 31, 2026.
பாதுகாப்புப் படையினரின் வீரம், துணிச்சல், ஈடுஇணையற்ற தியாகத்தின் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே நாட்டில் இருந்து நக்ஸலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது.
நக்ஸலிசத்தை ஒழிப்பதற்கான மத்திய அரசின் திட்டங்களுக்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள பாஜக அல்லாத பல அரசுகள் உதவியுள்ளன என்பதை என்னால் தயக்கமின்றி கூற முடியும். ஆனால், சத்தீஸ்கரில் இதற்கு முன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு எவ்வித உதவியும் அளிக்கவில்லை. டிசம்பர் 2023ல் சத்தீஸ்கரில் பாஜக அரசு அமைந்த பிறகுதான் பஸ்தர் பகுதியில் நக்ஸலிசத்தை எங்களால் ஒழிக்க முடிந்தது.
வளர்ச்சிப் பணிகள் இப்பகுதிகளைச் சென்றடையாததால்தான் நக்ஸலிசம் செழித்து வளர்ந்தது என்று சில அறிவுஜீவிகள் பல ஆண்டுகளாக வாதிட்டு வருகின்றனர். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது. நக்ஸலிசம் அங்கே நிலவியதால்தான் வளர்ச்சிப் பணிகள் இப்பகுதிகளைச் சென்றடைய முடியவில்லை. நக்ஸல் பாதிப்புக்குள்ளான பகுதிகளை விடவும் பின்தங்கிய நிலையில் உள்ள பல பகுதிகள் நாட்டில் உள்ளன. ஆனால், அங்கே நக்ஸலிஸம் இல்லை. இதனால், அந்தப் பகுதிகள் படிப்படியாக வளர்ச்சிப் பாதையில் முன்னேறின.
அதேநேரத்தில் பஸ்தர் உள்ளிட்ட நக்ஸல் பாதிப்புக்குள்ளான பிற பகுதிகள், வன்முறை மற்றும் அச்சத்தின் காரணமாக வளர்ச்சியின் பலன்களைப் பெற முடியாமல் பின்தங்கியே இருந்தன. இனி இப்பகுதிகளில் ஒரு புதிய தொலைநோக்குப் பார்வை உருப்பெறுவதை காண முடியும்” என தெரிவித்தார்.