புதுடெல்லி: தொகுதி மறுவரையறை தொடர்பான 3 மசோதாக்கள் மீது இன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இவற்றை நிறைவேற்ற மூன்றில் 2 பங்கு ஆதரவு தேவை எனும் நிலையில், பாஜக கூட்டணிக்கு பலம் இருக்கிறதா என்பதைப் பார்ப்போம்.
கடந்த 2023-ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களை, 850 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நேற்று தொடங்கியது. முதல் நாளில் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்காக அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகியவை மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த 3 மசோதாக்களுக்கும் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த மசோதாக்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்களின் ஆதரவு தேவை.
மக்களவையின் மொத்த பலம் 543 ஆகும். இதில் 3 இடங்கள் காலியாக உள்ளன. தற்போது 540 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். இதில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 293 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. எதிர்க்கட்சிகளிடம் 233 எம்.பி.க்கள் உள்ளனர்.
மூன்றில் இரண்டு பங்கு ஆதரவின் அடிப்படையில் மக்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற 360 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. தற்போதைய சூழலில் பாஜக கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை இல்லை.
மாநிலங்களவையின் மொத்த பலம் 245. இதில் ஓர் இடம் காலியாக உள்ளது. அவையில் 244 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். இதில் பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணிக்கு 141 எம்.பி.க்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளிடம் 83 எம்.பி.க்கள் உள்ளனர்.
மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு என்ற வகையில் மசோதாக்களை நிறைவேற்ற 163 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. மசோதாவை நிறைவேற்றும் அளவுக்கு மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை.