மும்பை: உங்களிடம் ஓட்டு, என்னிடம் பணம் என மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் பிரச்சாரத்துக்காக துணை முதல்வரும், நிதியமைச்சருமான அஜித் பவார் பாராமதி பகுதியில் மாலேகான் நகருக்கு சென்றார். அப்போது மக்களிடம் பேசிய அவர், ‘‘தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 18 வேட்பாளர்களையும் நீங்கள் தேர்வு செய்தால், உங்கள் தொகுதியின் வளர்ச்சிக்கு தேவையான நிதியில் குறைவு ஏற்படாமல் நான் பார்த்துக் கொள்வேன்.
நான் கூறிய வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவேன். நீங்கள் எங்கள் வேட்பாளர்களை தோற்கடித்தால், நான் நிதியை குறைப்பேன். உங்களிடம் ஓட்டளிக்கும் அதிகாரம் உள்ளது. என்னிடம் நிதி வழங்கும் அதிகாரம் உள்ளது. என்ன செய்ய வேண்டும் என நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள்’’ என்றார்.
இவரது பேச்சை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. மக்களை அச்சுறுத்தும் வகையில் அஜித் பவார் பேசியுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார்) எம்.பி. சுப்ரியா சுலே, ஓட்டுக்கு பணம் கொடுப்பேன் என வெளிப்படையாக கூறுவதா என கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அஜித் பவார் கூறியதாவது: நான் என்ன சொல்ல வேண்டுமோ அதைத்தான் கூறினேன். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பதை நீங்கள்தான் பேச வேண்டும். அது உங்கள் உரிமை. நான் உண்மையை கூறினேன். விமர்சனத்துக்கு எல்லாம் நான் முக்கியத்துவம் அளிக்க மாட்டேன். செய்ய வேண்டிய பணிகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிப்பேன்.
நாங்கள் வளர்ச்சியை விரும்புகிறோம். மக்களின் பிரச்சினையை தீர்க்க விரும்புகிறோம். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதியை பயன்படுத்த விரும்புகிறோம். உங்களிடம் வாக்களிக்கும் அதிகாரம் உள்ளது, என்னிடம் நிதி அளிக்கும் அதிகாரம் உள்ளது என நான் கூறியது எந்த வகையில் அச்சுறுத்தல்? இவ்வாறு அஜித் பவார் கூறினார்.