புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் பாகத்தை நாய்கள் கடித்துத் தின்ற அவலமும் நிகழ்ந்துள்ளது.
இந்த கொடூர குற்ற சம்பவம் டெல்லியில் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்வரூப் நகரில் நடந்துள்ளது. போலீஸார் உடலை கைப்பற்றிய போது இறந்தவரின் பாலினத்தை தடயவியல் நிபுணர்கள் அறிவதில் சிக்கல் இருந்தது. இந்த சூழலில் இந்த குற்ற பின்னணியை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
போலீஸ் விளக்கம்: இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள போலீசார், “ஸ்வரூப் நகரின் குஷாக் சாலைக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் உடல் ஒன்று கிடப்பதாக கடந்த 13-ம் தேதி எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை மீட்டு விசாரணையை தொடங்கினோம்.
உயிரிழந்தவர் 17 வயது சிறுமி என்பது ஆய்வு மற்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. உடலின் சில பாகங்களை தெரு நாய்கள் கடித்து தின்றுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை நாங்கள் ஆராய்ந்தோம். அப்போது சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே டெம்போ ஒன்று சென்றதை நாங்கள் அடையாளம் கண்டோம். போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் அதன் வாகன பதிவு எண்ணை எங்களால் அறிய முடியாத சூழல் இருந்தது.
இருப்பினும் அதை வைத்து எங்கள் விசாரணையை தொடங்கினோம். அந்த டெம்போ ஸ்வரூப் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்தது. உடனடியாக அதன் ஓட்டுநரிடம் விசாரித்தோம். அதன் அடிப்படையில் இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து அறிந்தோம்.
நான்கு பேர் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் மூவர் 16 முதல் 17 வயதுடைய சிறுவர்கள். மற்றொருவர் ஷிவம் என்கிற நபர். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இரண்டு கத்திகளை பயன்படுத்தி உள்ளனர். குற்ற சம்பவத்தின் போது அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் டெம்போவை கைப்பற்றி உள்ளோம்.
குற்றத்தில் ஈடுபட்டவர்கள், கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நன்கு அறிமுகமானவர்கள். குற்றச்செயலுக்கு முன்பாக ஐந்து பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன் பின்னர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாரிடம் இது குறித்து விசாரித்ததில், தங்கள் மகள் சில நாட்கள் வெளியூர் செல்வதாக சொல்லிவிட்டு சென்றதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.” என தெரிவித்துள்ளனர்.