புதுடெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் கடந்த 20-ம் தேதி நடத்தப்பட்ட போராட்டத்தில் வெளிநாட்டு அமைப்புகளுக்கு உள்ள தொடர்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை (ஜூலை 23) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய கடந்த 20-ம் தேதி, ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த சிஜேபி முயன்றது. அப்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். இதில், இரு தரப்பிலும் பலர் காயமடைந்ததோடு, டெல்லியின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி நடந்த போராட்டத்தின் பின்னணி குறித்தும், அதில் வெளிநாட்டு அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க உத்தரவிடக் கோரி அகில பாரத இந்து மகா சபையின் முன்னாள் துணைத் தலைவர் சதீஷ் குமார் அகர்வால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ‘நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்த போராட்டமாகத் தொடங்கிய இது, பல்வேறு அரசியல் தலைவர்களின் பங்கேற்புக்குப் பிறகு அரசியல் போராட்டமாக மாற்றப்பட்டுள்ளது. ஜூலை 20 அன்று நடைபெற்ற பேரணியில் வன்முறை, பொதுப் போக்குவரத்துக்குத் தடை, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்குச் சேதம், நாடாளுமன்ற பாதுகாப்பு வளையத்தை மீற முயற்சி, காவலர்களுக்குக் காயம் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள், பங்கேற்பாளர்களுக்கு வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்தப் போராட்டத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் பங்கேற்றுள்ளார். வெளிநாட்டு அமைப்புகளுடன் அவருக்கு உள்ளதாகக் கூறப்படும் தொடர்புகள் தொடர்பாக பொதுவெளியில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இதுகுறித்து தகுந்த அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
குறிப்பிட்ட அந்தப் போராட்டம் அடிப்படையில் மாணவர்களாலோ அல்லது மாணவர் சார்ந்த விவகாரங்களுக்காகவோ நடத்தப்படும் உண்மையான போராட்டம் அல்ல.
மாறாக, நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் நோக்கத்துடன், தேசவிரோத மற்றும் வெளிநாட்டு சக்திகளால் திட்டமிடப்பட்ட ஒரு பெரிய சதியின் ஒரு பகுதியாகவே தோன்றுகிறது. இந்த போராட்டத்தில், இந்தியாவுக்கு எதிரான நோக்கங்களைக் கொண்ட நபர்களும் குழுக்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை ஒரு சாதாரண போராட்டமாகக் கருதக் கூடாது. இதில் உள்ள உண்மைகளைக் கண்டறியவும், சம்பவத்துக்கு காரணமான நபர்களையும் அடையாளம் காணவும், இதன் பின்னணியில் உள்ள சதியை ஆராயவும் தேசிய பாதுகாப்பு முகமை மூலம் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா, நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வழக்கறிஞர் வருண் குமார் சின்ஹா தாக்கல் செய்தார்.
மேலும், இந்த மனுவை நாளை அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரினார். இதையடுத்து, இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள டெல்லி உயர் நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.