புதுடெல்லி: இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பாகவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த விவகாரத்தில் சோனியா காந்திக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு இந்திய குடியுரிமை கடந்த 1983-ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றது. இதை எதிர்த்து திரிபாதி என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை கடந்த செப்டம்பர் 11-ல் விசாரித்த கீழமை நீதிமன்றம், போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறி திரிபாதியின் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் குற்றவியல் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பாகவே வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க போலி ஆவணங்களை கொடுத்து மோசடி செய்ததாக சோனியா காந்தி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றவியல் சீராய்வு மனுவுக்கு சோனியா காந்தி மற்றும் டெல்லி காவல் துறை பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது’’ என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, “சோனியா காந்தி மீதான குற்றச்சாட்டுகளுக்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. இந்திய குடியுரிமையை பெற்ற பிறகே எனது தாயார் தேர்தலில் வாக்களித்துள்ளார்.
சோனியாவுக்கு 80 வயதாகி விட்டது. அதன்பின்னரும் ஏன் அவரை குறிவைத்து தாக்குகிறார்கள் என்பதான் புரியவில்லை. நாட்டுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துள்ள அவரை நாம் பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.