புதுடெல்லி: இந்தியக் கடலோர காவல்படை மற்றும் கடற்படைக்கு ரூ.5,083 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியக் கடலோர காவல்படைக்கு 6 எம்கே-II மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் இந்தியக் கடற்படைக்கு தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை அழிக்கவல்ல ஷெட்டில் ஏவுகணைகள் ஆகியவற்றை ரூ.5,083 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற இந்த ஒப்பந்தம், பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் கையெழுத்தானது. இவற்றில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் திட்டத்தின் கீழ், பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,901 கோடி மதிப்பில் 6 எம்கே-II மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது.
ரஷ்யாவின் ஜெஎஸ்சி ரோசாபோரான் எக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் ரூ.2,182 கோடி மதிப்பில் ஷெட்டில் ஏவுகணைகளை ஒப்பந்தம் செய்ய கையெழுத்தானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.