இந்தியா

“இது என்ன வகையான நீதி?” - உன்னாவ் பாலியல் வழக்கு விவகாரத்தில் ராகுல் காந்தி ஆவேசம்

மோகன் கணபதி

புதுடெல்லி: உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட விவகாரத்தில், “இது என்ன வகையான நீதி?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “நாம் ஒரு இறந்த பொருளாதாரம் மட்டுமல்ல; இதுபோன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்களால் நாம் ஒரு இறந்த சமூகமாகவும் மாறி வருகிறோம்” என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் பங்கார்மாவு தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக இருந்த குல்தீப் சிங் செங்கார், சிறுமி ஒருவரை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் செங்காரைக் கைது செய்தனர். தொடர்ந்து பாஜகவில் இருந்தும் செங்கார் நீக்கப்பட்டார்.

இதற்கிடையே வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் உட்பட உறவினர்கள் சிலர், வழக்கறிஞருடன் ரேபரேலியில் உள்ள உறவினரைச் சந்திக்கச் சென்றபோது லாரி ஒன்று இவர்கள் காரின் மீது மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர், பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். அவர் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதையடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் விபத்து ஏற்படுத்திய வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டது. குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை, சதி, கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் கீழ் டெல்லிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து குல்தீப் சிங் செங்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் செவ்வாய்க்கிழமை அன்று குல்தீப் சிங் செங்காருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்தது. மேலும், அவருக்கு நிபந்தனை ஜாமீனும் அளித்துள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை கொலை செய்த வழக்கில் அவர் தண்டனையை அனுபவித்து வருகிறார். அந்த தண்டனையையும் சஸ்பெண்ட் செய்யக் கோரி அவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறுமியாக இருந்தபோது பாதிக்கப்பட்ட பெண், “இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிக்கு ஜாமீன் கிடைத்தால், இந்த நாட்டின் மகள்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பார்கள்? எங்களைப் பொறுத்தவரை இந்த உத்தரவு மரணத்துக்கு இணையானது. பணம் உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்கள்; பணம் இல்லாதவர்கள் தோற்கிறார்கள்” என கூறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர் இதுபோன்று நடத்தப்படுவது நியாயமானதா? நீதிக்காக குரல் கொடுக்கத் துணிந்ததுதான் அவர் செய்த தவறா?

பாதிக்கப்பட்டவர் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்பட்டு அச்சத்தில் வாழும்போது, அவரை குற்றவாளியாக்கிய நபருக்கு (முனனாள் பாஜக எம்எல்ஏ) ஜாமீன் வழங்கப்பட்டது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இது மிகவும் வெட்கக்கேடானது.

பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஜாமீன். பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். இது என்ன வகையான நீதி?

நாம ஒரு இறந்த பொருளாதாரம் மட்டுமல்ல; இதுபோன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்களால் நாள் ஓர் இறந்த சமூகமாகவும் மாறி வருகிறோம். ஜனநாயகத்தில் எதிர்ப்புக் குரல்களை எழுப்புவது ஓர் உரிமை. அதை அடக்குவது ஒரு குற்றம். பாதிக்கப்பட்டவருக்கு கிடைக்க வேண்டியது மரியாதை, பாதுகாப்பு, நீதி ஆகியவையே; உதவியற்ற நிலை, அச்சம், அநீதி அல்ல’’ என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT