திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்க வாசல் தரிசனத்துக்கு இம்மாதம் 30, 31 மற்றும் ஜன. 1-ம் தேதிகளில் தரிசன டிக்கெட்டுகள் இருக்கும் பக்தர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
இதுதொடர்பாக திருப்பதியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வரும் 30-ம் தேதி வைகுண்ட ஏகாதசியும், மறுநாள் 31-ம் தேதி துவாதசியும், ஜன.1-ம் தேதி ஆங்கில புத்தாண்டும் பிறக்க உள் ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த மாதமே ஆன்லைன் மூலம் குலுக்கல் முறையில் ரூ.300 சிறப்பு தரிசனடிக்கெட்டுகளும், வாணி அறக்கட்டளைக்கான டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டு விட்டன.
இந்த 3 நாட்களில் விஐபி பிரேக் தரிசனம், மாற்று திறனாளி பக்தர்களுக்கான தரிசனம், முதியோருக்கான தரிசனம் உட்பட அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன.கடந்த கால அனுபவங்களை நினைவில் கொண்டு, வைகுண்டஏகாதசிக்கு வரும் பக்தர் களுக்கு திருப்பதியில் டிக்கெட்டுகளை வழங்கினால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு விபரீதங்கள் நடக்கவும் வாய்ப்புகள் உள்ளதால் இம் முறை ஆன்லைனில் குலுக்கல் முறையில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுவிட்டன.
சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக மேற்கண்ட 10 நாட்களில் 182 மணிநேரத்தில் 164 மணி நேரம் சாமானிய பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இ-டிப் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் அதில்குறிப்பிட்டுள்ள நேரத்தில் திருமலைக்கு வர வேண்டும். 27 மாநிலங்களில் இருந்து சொர்க்க வாசல் தரிசனத்துக்கு 23.64 லட்சம் பக்தர்கள் இதுவரை முன்பதிவு செய்தனர். 1.89 லட்சம் சாமானிய பக்தர்கள் குலுக்கல் முறையில் பதிவு செய்தனர்.
ஆதலால், எவ்வித தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் இல்லாத பக்தர்கள் வரும் டிச. 30, 31, ஜன. 1-ம் தேதி திருமலைக்கு வரும் நோக்கத்தை தள்ளி வைத்து கொள்ளுதல் நல்லது. ஜன.2 முதல் 8-ம் தேதி வரை எவ்வித தரிசன டிக்கெட்டுகள் இல்லாவிடினும் தர்ம தரிசனம் வாயிலாகச் சென்று சுவாமியை சொர்க்க வாசலில் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்துவிடலாம். வைகுண்ட ஏகாதசி, துவாதசி, ஆங்கில புத்தாண்டுக்கு தரிசன டிக்கெட்டுகள் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு வந்து ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.