கோப்புப் படம்
புதுடெல்லி: உத்தரபிரதேசம் வாராணசியின் மணிகர்ணிகா மயானத்தில் எரியும் சிதைகளுக்கு இடையே இளம்பெண்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு முழுவதுமான இந்த பாரம்பரிய நிகழ்ச்சி கடந்த 282 வருடங்களாகத் தொடர்கிறது.
உ.பி.யின் முக்கியப் புனித நகரமாக இருப்பது பனாரஸ் மற்றும் காசி எனும் வாராணசி. மிகவும் பழமையான நகரமாகக் கருதப்படும் இங்கு பல பாரம்பரியங்களும் கலாச்சாரங்களும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்கின்றன.
இதில் ஒன்றாக தற்போதைய நவராத்திரி நாட்களில் மயான நடனம் இடம் பெற்றுள்ளது. வாராணசியின் கங்கை கரையில் உள்ள மணிகர்ணிகா மயானத்தில் நேற்று முன்தினம் இரவு 'சைத்ர நவராத்ரி’ எனும் முக்கிய நாளில் இது நடைபெற்றது.
வாராணசியின் கங்கை கரைகளில் உள்ள மயானங்களில் மிகப் பெரியது மணிகர்ணிகா ஆகும். இங்கு 24 மணி நேரமும் இடைவிடாமல் சிதைகள் வந்து எரிகின்றன. இங்கு நடைபெறும் ஈமச்சடங்கு ஆன்மாவுக்கு முக்தி அளிக்கும் என்ற நம்பிக்கையே இதற்கு காரணமாகும்.
எரியும் சிதைகளுடன் மரண அமைதி நிலவும் இங்கு இரவு முழுவதும் சலங்கை ஒலியுடன் நடனம் தொடர்ந்தது. இதற்காக மேடை அமைத்து நகரவதூக்கள் என்று அழைக்கப்படும் பாலியல் தொழிலாளிகள் நடனமாடுகின்றனர்.
இவர்களுடன் திருநங்கைகளும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வின் பின்னணியில் தங்களின் அடுத்த பிறவி, மேம்பட்டதாக அமையும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கடந்த 382 ஆண்டுகளாக இந்த வியப்புக்குரிய சங்கமத்தின் பாரம்பரியம் தொடர்கிறது. இது வெறும் ஒரு கலைநிகழ்ச்சியாக மட்டுமின்றி, ஒரு வகையான பிரார்த்தனை மற்றும் ஆன்மிக வழிபாடாகவும் கருதப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் வாராணசி மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து வந்தும் நடனமாடுகின்றனர்.
மயானங்களின் காவலராக கருதப்படும் ‘பாபா மசான் நாத்'துக்காக ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாள் சிருங்கார விழா நடைபெறுகிறது. இதன் இறுதி நாளில் இவர்கள் நடனமாடி பாபா மசான் நாத்துக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். மயானத்துக்கு சடலங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும், அங்கு இசையின் தாளத்துக்கு ஏற்ப நடனமும் தொடர்ந்தது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருநங்கையான பப்பு கூறுகையில், “17-ம் நூற்றாண்டில், காசியை ஆண்ட மன்னர் மான்சிங், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க படித்துறையில், சுடுகாட்டின் அதிபதியாகவும் 'மசான் நாத்' என்றும் போற்றப்படும் சிவபெருமானுக்காக ஒரு ஆலயத்தைக் கட்டினார். அந்த இடத்தில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த அவர் விரும்பினார்.
இதற்கு எந்தவொரு கலைஞரும் அங்கு வரத் துணியவில்லை. அப்போது வாழ்ந்த பாலியல் தொழிலாளிகள் மட்டுமே அதற்கு முன் வந்தனர். கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள மசான் நாத்தின் சன்னதியில் அவர்கள் தங்கள் நடனத்தை அர்ப்பணித்தனர். அந்தக் காலத்திலிருந்தே அதே பக்தியுடனும் நம்பிக்கையுடனும் இந்த மரபு இன்று தொடர்கிறது” என்றார்.