புதுடெல்லி: இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள், காமிகேஸ் ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.
சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் சமீபத்தில் இந்தியா வந்தார். அப்போது இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள், 'நாகாஸ்த்ரா-1' மற்றும் 'ஸ்கைஸ்ட்ரைக்கர்' போன்ற காமிகேஸ் ட்ரோன்களையும் (தற்கொலைப்படை ட்ரோன்கள்) வாங்குவதில் சைப்ரஸ் விருப்பம் தெரிவித்தது. மேலும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த ராணுவ ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், துருக்கி அதிபர் ரசிப் தையீப் எர்டோகனுக்கு மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும். சைப்ரஸ் நாட்டின் வட பகுதியை நீண்டகாலமாக ஆக்கிரமித்து இருக்கும் துருக்கியின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமையும். இதனால் இந்தியாவிடம் பிரம்மோஸ் மற்றும் ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் முடிவு செய்துள்ளது துருக்கியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டபோது, பாகிஸ்தானுக்கு துருக்கி நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ரகசியமாக அனுப்பியது. அவற்றை இந்திய எல்லைகள் நோக்கி அனுப்பியது பாகிஸ்தான். ஆனால், இந்திய வான் பாதுகாப்பு கருவிகள் அவற்றை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தின. இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தானின் விமான தளங்களைத் தகர்த்ததை துருக்கி உட்பட உலக நாடுகள் நன்கு அறியும். இதனால் இந்திய ஆயுதங்களை வாங்க சைப்ரஸ் முடிவு செய்திருப்பது துருக்கிக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.