புதுடெல்லி: கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது ஹமாஸ் அமைப்பினர் ட்ரோன், பாராசூட், ராக்கெட்டுகள் மூலம் திடீர் தாக்குதல் நடத்தினர். அதை உடனடியாக சமாளிக்க இஸ்ரேல் ராணுவ வீரர்கள் திணறிவிட்டனர்.
இந்நிலையில் ஹமாஸ் பாணியை பின்பற்றி இந்தியாவில் தாக்குதல் நடத்த மருத்துவர் உமர், அவரது நெருங்கிய நண்பர் தானிஷ் (எ) ஜசீர் முகமது பிலால் வானியும் சதி திட்டம் தீட்டியுள்ளனர். ஆனால், கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றி டெல்லியில் முதல் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி உள்ளனர். உமரும் ஜசீரும் பல மாதங்களாக சிறிய கை ராக்கெட், ட்ரோன்களில் குண்டுகள் வைத்து வெடிக்க செய்து சோதனை நடத்தியுள்ளனர். இந்த தொழில்நுட்பத்தை ஜசீர் தெரிந்து வைத்துள்ளார்.
காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் காஜிகுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜசீர். தந்தையுடன் உலர் பழங்கள் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரை காஷ்மீரில் கைது செய்த போலீஸார், டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது ஐ20 காரை வாங்கி உமரிடம் கொடுத்த ஆமீர் ரஷீத் அலியையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதற்கிடையில் உயிரிழந்த உமர், ஹரியானாவின் பரிதாபாத்தில் கைது செய்யப்பட்ட மருத்துவர் முஜம்மில் ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு துருக்கி செனறு வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்துவது எப்படி என்பது குறித்து ஜெய்ஷ் அமைப்பினர் பயிற்சி அளித்துள்ளனர்.
இதற்கிடையில், டெல்லி குண்டுவெடிப்புக்கு முன்பு மருத்துவர் உமர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தீவிரவாதத் தாக்குதலுக்காக இஸ்லாத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொள்வது தவறில்லை என வாதிட்டுள்ளார். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலும் அப்பதிவில் சில குறிப்புகள் உள்ளன. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.