புதுடெல்லி: வந்தே மாதரம் பாடலை அவமதித்ததற்கு காங்கிரஸ் வெட்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்காரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வாஜ்பாயின் சிலையைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், முதல்வர் பஜன்லால் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் சனிக்கிழமை வந்தே மாதரம் தேசியப் பாடல் பாடப்பட்டது. அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அப்பாடலை நிறுத்துமாறு கட்சித் தலைவரைக் கேட்டுக் கொண்டார். இதை நாம் அனைவரும் டிவியில் பார்த்தோம். சோனியா ஜி, 140 கோடி மக்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் செய்துள்ள இந்த பாவத்தை நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்துவதை யாராவது கனவில் கூட காண முடியுமா? இதற்காக காங்கிரஸ் கட்சியினர் வெட்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி பேராசையால் வந்தே மாதரத்தை மறந்துவிட்டது. தேசியப் பாடலுக்கு ஏற்பட்ட அவமதிப்புக்கு காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான இந்திரா பவனில் சனிக்கிழமை சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டபோது சோனியா காந்தி சைகை காட்டி எதிர்ப்பு தெரிவித்ததாக பாஜக குற்றம் சாட்டியது. இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தது.
சோனியா மீது புகார்
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்ததுடன், கார்கேவுக்கு இருக்கை வழங்கும்படி சோனியா சைகை காட்டியதாக தெரிவித்துள்ளது. மேலும், அந்த நிகழ்ச்சியில் வந்தே மாதரத்தின் முழு வடிவம் பாடப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே, சோனியா மீது வழக்குப்பதிவு செய்யும்படி கோரி, பாஜக சார்பில் காவல்துறையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.