புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உட்பட 5 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான கொலீஜியம் கூட்டம் கடந்த மே 22, 27-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில், பஞ்சாப் -ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசேகர், மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, ஜம்மு காஷ்மீர் லடாக் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் பல்லி, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, 5 பேரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி எண்ணிக்கை 37 ஆனது
புதிய நீதிபதிகளுடன் சேர்ந்து, தலைமை நீதிபதி நீங்கலாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகளுக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மோகனாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
உச்ச நீதிமன்ற வரலாற்றில்..
உச்ச நீதிமன்ற வரலாற்றில், மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் 2-வது பெண் என்ற பெருமையையும், தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டிருப்பது பெண் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு உந்துசக்தியாகத் திகழும். உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ள அவருக்கு என் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.