இந்தியா

ஜெய்ப்பூர் போராட்டத்தில் கஜக நிறுவனர் அபிஜித் தீப்கே மீது தாக்குதல்

வேட்டையன்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் போராட்டத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்ட களத்துக்குள் இருந்த சிலர், அபிஜித் தீப்கேவின் கன்னத்தில் அறைந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நீட், சிபிஎஸ்இ போன்ற தேர்வுகளில் நிலவும் குளறுபடி, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இன்று (ஜூன் 15) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அபிஜித் தீப்கே பங்கேற்றார். அவரை போராட்டத்தில் ஈடுபட்ட கஜக ஆதரவாளர்கள், தங்களது தோள்களில் சுமந்து சென்றனர். ஜெய்ப்பூரில் உள்ள ஷாஹித் ஸ்மாரக் பகுதியில் இந்த போராட்டம் நடைபெற்றது. அங்கு இளைஞர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர்.

அப்போது கூட்டத்துக்குள் நுழைந்த சிலர் அபிஜித் தீப்கேவின் கன்னத்தில் அறைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டது. அபிஜித் தீப்கேவை தாக்கியவர்களில் இருவரை கூட்டத்தில் இருந்தவர்கள் பிடித்தனர்.

தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவலர்கள் தடுப்பு காவலில் கைது செய்தனர். தற்போது அவர்கள் இருவரிடமும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாக காவல் துறை வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

“இது முற்றிலும் கோழைத்தனமான செயல். இது மாதிரியான உடல் ரீதியான தாக்குதல்கள் பயத்தின் அறிகுறியாகும். அமைதியான முறையில் நாம் தொடர்ந்து குரல் எழுப்புவோம். காந்தி மற்றும் அம்பேத்கரை பின் தொடர்ந்து வருகிறேன். இந்த போராட்டத்தை அமைதி, அன்புடன் தொடர்ந்து முன்னெடுப்பேன். தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அபிஜித் தீப்கே கருத்து தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT